வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவை குண்டுவெடிப்பு: குற்றம்சாட்டப்பட்ட 168 பேருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் 1998-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள 168 எதிரிகளுக்கும் கோவை ஜுடிசியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நிசார் மதானி ஆகியோர் இதில் முக்கிய எதிரிகள். ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் குற்றப்பத்திரிக்கைகளை எதிரிகளுக்கு வழங்கினார்.
குற்றப்பத்திரிக்கை வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பாஷா மற்றும் ஆறு பேர் குற்றப்பத்திரிக்கைகளை பெற்றுக் கொண்டனர். அல் உம்மா துணைத் தலைவர் தஜுதீன், மத்திய செயலாளர் முகம்மது அன்சாரி, பாஷாவின் மகன் சித்திக் மற்றும் 27 பேர் குற்றப்பத்திரிக்கைகளை பெற மறுத்து விட்டனர். சிறையில் தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகக் கூறி அவர்கள் இவ்வாறு தெரிவித்து விட்டனர்.
மதானியும் குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்து விட்டார். தனக்குத் தமிழ் தெரியாது என்றும், எனவே மலையாளத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி விட்டார்.
- 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 181 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
- எதிரிகள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 41 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குற்றம்சாட்டப்பட்ட 181 பேரில் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவர் தலைக்கும் ரூ. 2 லட்சம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் இறந்து விட்டனர்.
- இந்த வழக்கில் மொத்தம் 2332 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் 1498 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- குற்றப்பத்திரிகை மொத்தம் 16,483 பக்கங்கள் கொண்டது, தமிழில் உள்ளது. ஒவ்வொரு பிரதியும் 48 கிலோ எடை கொண்டது. அனைவருக்கும் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் மொத்த பக்கங்கள் 30.08 லட்சம் ஆகும். இதற்காக ரூ. 18 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏழு சிறப்பு டிராலிகளில் வைத்து நீதிமன்றத்திற்கு இவை கொண்டு வரப்பட்டன.
- குற்றம்சாட்டப்பட்டுள்ள 168 பேரில் 124 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பலத்த பாதுகாப்புடன் அனைத்து எதிரிகளும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
- கோவை நகர் முழுவதிலும் கூட பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications