வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீரில் ஊடுறுவலை நிறுத்த பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன்அறிவுரை
பிரஸ்ஸல்ஸ்:
இந்தியாவுக்குள் ஊடுறுவல்காரர்களை அனுப்பும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூனியனின் ஆணையர் பால் நீல்சன் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவல்காரர்களை அனுப்புவது குறித்து கூட்டத்தில் பேசியவர்கள் கவலை தெரிவித்தனர்.
கூட்டத்தில் நீல்சன் பேசுகையில், காஷ்மீர் தொடர்பாக எந்த தீர்மானத்தையும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடும்.
காஷ்மீர் விவகாரத்தில் சமநிலையான அணுகுமுறை தேவை. இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று மூன்றாவது நாடுகள் இரு நாடுகளையும் கேட்டுக் கொள்ளலாம். லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சு நடத்த வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வர சில உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால் அதை நீல்சன் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு பாதகமாக தீர்மானம் நிறைவேற்றுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இறுதியில் உப்புச்சப்பில்லாத வகையில் ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்தியாவுக்கு எதிரானதாக அந்த தீர்மானம் இல்லை.
காஷ்மீரிகளின் சுய நர்ணய உரிமை உள்ளிட்ட பல சர்ச்சைக்கிடமான அம்சங்கள் அதில் இல்லை.
இந்தியாவுக்கு சாதகமாக முதல் முறையாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை வெளிப்படையாகவும் அது கண்டித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாரீஸைச் சேர்ந்த வெளியுறவு விவகாரத் துறை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.