Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

வாழப்பாடி-ராமதாஸ் மோதல் பின்னணி

டாக்டர் ராமதாஸ்- வாழப்பாடி ராமமூர்த்தி இடையே சமரசம் ஏற்படுத்த, தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், ஓரணியில் உள்ள இந்த இரு தலைவர்களுக்கு இடையே நிலவும் பகைமை மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"தேசிய ஜனநாயக் கூட்டணியை விட்டு விலக மாட்டேன் " என்று வாழப்பாடி ராமமூர்த்தி அளித்துள்ள பதில், இப் பிரச்சினையின் வேகத்தை தணிக்க உதவிய தாற்காலிக வார்த்தைகளே தவிர வேறில்லை. சமரச முயற்சி காணக்கூடிய கூட்டத்துக்குப் பின்னர், " தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி வாழப்பாடி ராமமூர்த்தி நீடிப்பதும், நீடிக்காததும் அவர் எடுக்கும் நிலையைப் பொறுத்தது " என்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்குத்தான் வாழப்பாடி இந்த பதிலை தந்துள்ளார் என்றே கருதப்படுகிறது. இந்த அணியில் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் ராமதாஸ்-வாழப்பாடி மோதலுக்கான தீர்வாக இதை கருத முடியாது என்பதே உண்மை.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான "வன்னியர் " இனத் தலைவர்கள் என்ற முறையில் டாக்டர் ராமதாஸுக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே நெருக்கம் அதிகம். கட்சி எல்லையைக் கடந்து இந்த உறவு இவ்வளவு நாளும் நீடித்தது. அ.தி.மு.க-பா.ம.க. உறவு , தி.மு.க.-பா.ம.க. உறவு என்ற இரு நிலைகளை அடுத்தடுத்து எடுத்ததன் மூலம் ஏழெட்டு எம்.பி.க்கள், மந்திரிகள் என்ற உயர்ந்த நிலையை பா.ம.க.வால் பெற முடிந்ததது. அதற்குக் காரணமான அரசியல் முடிவுகளை ராமதாஸ் எடுப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் வாழப்பாடி என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கும் சுயநலம் தான் காரணம். தமிழகத்தில் கட்சி பலமில்லாத ராமமூர்த்தி, எந்த அணியில் சேர்ந்தாலும் பா.ம.க. பின்னணி பலம் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அடையலாம்என்று கணக்கு போட்டிருந்தார். அந்தக் கணக்குக்கு 1998-ம் ஆண்டு தேர்தல் கை கொடுத்தது. அ.தி.மு.க. வுடன் அணி சேர்ந்து ராமதாசும், வாழப்பாடியும் அமோக வெற்றி பெற்றனர். ராமதாஸின் ஆதரவோடு தனி எம்.பி.யாக இருந்த வாழப்பாடி மந்திரி ஆனார்.

அதே கணக்கின் அடிப்படையில் தி.மு.க. கூட்டணியிலும் வாழப்பாடி நிறைய எதிர்பார்த்தார். ஆனால், ராமதாஸ் உஷாராகி விட்டார். 13 மாதங்களில் மத்தியில் சக்திமிக்க அமைச்சராக வாழப்பாடி இருந்தபோது பா.ம.க.வில் அதிகம் தலையிடத் துவங்கினார் என்பதே அவர் மீது பா.ம.க.வினர் கூறும் குற்றச்சாட்டு. அதனால் வாழப்பாடி கேட்ட இரண்டு தொகுதிகளை (சேலம், ராசிபுரம்) தர மறுத்தார். சேலத்திலும் வாழப்பாடி வெற்றிக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்பதெல்லாம் பழைய பல்லவிகள். இதற்கு வாழப்பாடி சொன்ன காரணம், இன்னொரு வன்னியர் தலைவர் வளருவதை ராமதாஸ் விரும்பவில்லை என்பதுதான்.

பரஸ்பரம் இருவரும் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை இவர்கள் இருவரும் தற்போது மோதிக்கொள்ளும் வேகத்தை வைத்தே தீர்மானிக்கலாம். இந்நிலையில் நீருபூத்த நெருப்பாக இருந்த பகைமை, வாழப்பாடியின் திடீர் ஊழல் குற்றச்சாட்டால் பகிரங்கமாக வெடித்தது. ராமதாஸ் மீதும், அவரது மகன் மீதும் ஊழல் புகார்களை அடுக்கிய காரணத்தால், பா.ம.க.வினர் பொங்கி எழுந்தனர். வாழப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கொடும்பாவி எரிப்பு என இறங்கினர். பதிலுக்கு வாழப்பாடி கட்சியினரும் களம் இறங்கினர். விளைவு தமிழக பத்திரிகைகளில் நாள்தோறும் பரபரப்புச் செய்தியாக, இந்த விவகாரம் மாறியது. இதை ஒட்டுமொத்த கூட்டணிக்கே களங்கம் என கருதிய முதல்வர் கருணாநிதியும், மற்ற தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக " சமரசக் கூட்டம் " கூட்டப்பட்டது. இந்த கூட்டத்துக்கு முன்தினம் சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டுக்கு அருகே பா.ம.க. பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பா.ம.க. மாநில நிர்வாகிகள் பேசினர். இந்த கூட்டத்தில் வாழப்பாடியைப் பற்றிப் பேசிய பேச்சுக்கள்தான், மறுநாள் நடந்த சமரச கூட்டத்துக்கு வாழப்பாடி வராததற்கான காரணங்களில் முக்கியமானது என்கின்றனர்.

ஒரு பக்கம் சமரச முயற்சி என்று தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறிக் கொண்டிருந்தாலும், மறுபக்கத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. சமரசப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நேரத்தில் இத்தைகைய கூட்டங்கள் அவசியமா? அதற்கு ஆளும் பொறுப்பில் இருக்கும் தி.மு.க. அனுமதி கொடுக்கலாமா? அப்படி அனுமதி கொடுக்கும் போது உண்மையான சமரச நோக்கம் உள்ளதா? என்ற கேள்விகள் தமிழக ராஜீவ் காங்கிரல் வட்டாரத்தில் எழுந்தன. இது பற்றித்தான் 28-ம் தேதி காலை கூடிய த.ரா.கா. உயர் மட்டக்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. வாழப்பாடியின் பழைய விமர்சனங்களால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் ராமதாஸின் செயல்பாடுகளுக்கு முதல்வர் கருணாநிதி தற்ப்ோது ஆதரவாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் இக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சமரசக் கூட்டத்தை வாழப்பாடி புறக்கணிக்க நேரிட்டது என்கின்றனர்.

இப் பின்னணியில் வாழப்பாடி இல்லாமல் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், வாழப்பாடியின் அடுத்த முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஏ.கே. நடராஜன், தீரன், பண்ருட்டி ராமச்சந்திரன் என்று ராமதாசுக்கு எதிரான மற்ற வன்னியர் தலைவர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் வாழப்பாடி தீவிரம் காட்டுவதாக பா.ம.க. தரப்பில் எடுத்து வைக்கப்பட்டது. தனது ஆதரவாளர்கள் மூலம் வன்னியர் சங்கம் நடத்தவும், தனக்கு எதிராக அவதூறு பிரசாரங்களைத் தொடரவும் முடிவெடுத்துள்ளனர் என்று ராமதாஸ் கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே ராமதாஸ் செயல்பாடுகள் பற்றி 80 பக்கம் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தியவர் வாழப்பாடி என்பதால், இக் கருத்துக்களுக்கு தி.மு.க. தலைவர் முக்கியத்துவம் கொடுத்தார். அதன் அடிப்படையில்தான் ""வாழப்பாடி நீடிப்பதும், நீடிக்காததும் இனி அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தது"" என்ற அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பதிலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பேன் என்பதை மட்டும் கூறியுள்ள வாழப்பாடி, ராமதாஸுக்கு எதிரான பிரச்சினையில் என்ன நிலை எடுக்கப் போகிறார் என்பதை தெரிவிக்கவில்லை. இந்த கேள்விக்கு விடை தெரியாத வரையில் ராமதாஸ்-வாழப்பாடி மோதல் நீடிக்கும்.

இருவருக்கும் இடையே சமரசம் காணவேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த தமிழக ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும், இப்பிரச்சினைக்கான முடிவை வாழப்பாடி கையில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+