வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: ஜெ. திடீர் அறிக்கை
சென்னை:
அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதா நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
துணைப் பொதுச்செயலாளர் செங்கோட்டையன், கருப்பசாமிபாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் ராமச்சந்திரன், ரகுபதி, மன்ற பொதுச்செயலாளர் கடம்பூர் ஜனார்த்தனன், இளைஞர் அணி செயலாளர் லியாகத் அலிகான், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள்:
திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராகவும், மணியன் எம்.கொள்கை பரப்புச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராக விநாயக மூர்த்தி, டாக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக டிடிவி தினகரன் எம்.பி.மற்றும் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்சென்னை:
மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வீடியோ வி.சரவணன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடசென்னை:
முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த பாலகங்கா நீக்கப்படுகிறார்.
செங்கல்பட்டுக் கிழக்கு:
செங்கல்பட்டில் பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், பேரவைச் செயலாளர்கள், சங்கத் தலைவர்கள் அனைவரும் நீக்கப்படுகிறார்கள். இதே போல் ஈரோடு, திண்டுக்கல் கிழக்கு, திருச்சி, சேலம், மதுரை, மதுரை புறநகர், சேலம்,சேலம் புறநகர் மேற்கு, தஞ்சாவூர் வடக்கு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் அனைவரும் மொத்தமாய் நீக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிமன்றக் குழு கலைப்பு:
அதிமுக ஆட்சிமன்றக் குழு கலைக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதிய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பெயர் எதையும் ஜெயலலிதா வெளியிடவில்லை.