வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வக்கார் யூனிஸின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஷார்ஜாவில் நடந்த கோகோ கோலா கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 16 ரன்களில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இப்போட்டியில் துவக்கம் முதலே, வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 263 ரன்களைக் குவித்தது. இளம் வீரர் நசீர் சிறப்பாக ஆடி 69 ரன்கள் எடுத்தார். அவரும் அப்ரிதியும் சேர்ந்து அணிக்கு வலுவான துவக்கத்தைக் கொடுத்தனர். அப்ரிதி 52 ரன்கள் சேர்த்தார்.
இன்சமாம் உல் ஹக் 82 பந்துகளில் 53 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரரை வலுப்படுத்தினர். அவருக்குப் பின் வந்த யுஹானா 26 ரன்களும், ரஸ்ஸாக் 20 ரன்களும் எடுத்தனர்.இறுதியில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ஓவர்களில் 263 ரன்களைச் சேர்த்தது. கல்லிஸ், குளூஸ்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னப்பிரிக்கா முதலிலேயே அதிர்ச்சியுடன் துவங்கியது. கிர்ஸ்டன் சொற்ப ரன்களில் வீழ்ந்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான மெக்கன்சி சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 107. இருப்பினும் அணியின் விக்கெட் வீழ்ச்சியை அவர் தடுத்தார். அவருக்குத் துணையாக கேப்டன் குரோனியும் நின்று ஆடி 79 ரன்களைக் குவித்தார். விக்கெட் கீப்பர் பெளச்சரும் அபாரமாக ஆடி 57 ரன்கள் எடுத்தார்.
ஒருகட்டத்தில் வெற்றி இலக்கை எட்டி விடும் நிலையில் தென்னப்பிரிக்கா இருந்தது. இந்த நிலையில் வக்கார் யூனிஸ் பந்து வீச வந்தார். வெற்றிக்கு 64 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தது.அப்போது அடுத்தடுத்த இரண்டு பந்துகளல் குளூஸ்னரையும், நிக்கி போயேயையும் வக்கார் வெளியேற்றினார்.
தனது கடைசி ஓவரில் பெளச்சரை போல்டு செய்தார். அப்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 238 ஆக இருந்தது. மொத்தம் 62 ரன்களை மட்டுமே கொடுத்த வக்கார், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்த வக்கார் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
யு.என்.ஐ.