மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
மே 02, 2000
கண்ணன் -என் காதலன் (4)
(பரங்கியைத் தூது விடுத்தல்)
(தங்கப்பாட்டு மெட்டு)
(ரசங்கள்: சிருங்காரம், ரெளத்ரம்)
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் -பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம் (1)
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் -என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் (2)
சொன்ன மொழிதவறு மன்னவனுக்கே -எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ (3)
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைத்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம் (4)
ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள் -எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம். (5)
சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ! (6)
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் -மிகப்
பீழையிருக்குதடி தங்கமே தங்கம்!
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சையுள்ளமே (7)
நேர முழுதிலும் பாவி தன்னையே -உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்! (8)
(அடுத்து கண்ணன் என் - காந்தன்)