தமிழகத்தில் இன்று
வடமாநில வறட்சிக்கு உதவும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்திய அரசுபாராட்டு - அத்வானி
அகமதாபாத்:
வட மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சிக்கு நிவாரண உதவிகள் செய்யும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பாராட்டுசெய்யப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பதான், சுரேந்திர நகர் மாவட்டங்களை அத்வானியும், மத்திய வேளாண்துறைஅமைச்சர் சுந்தர் லால் பாட்வாவும் செவ்வாய்க்கிழமை சுற்றுப் பார்த்தனர்.
வறட்சி குறித்த முதல் கட்ட தகவல்களைத் திரட்டிய பிறகு நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய, மாநிலஅரசுகள் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றன.
மாநிலங்களில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வெளியிலிருந்து உதவி கோரப்பட்டுள்ளது. அவ்வாறு,வறட்சி நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பலர், உதவி செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனர். சட்டரீதியாக சில பிரச்சினைகள் உள்ளதால் இதுவரை அவர்களதுஉதவி கிடைக்கவில்லை. அவர்களது நிதியுதவியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு மாநில அரசு அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர்கள் இருவரும் பேச்சு நடத்தினர். அடுத்து வரவுள்ள பருவமழைபொய்த்துவிட்டால், வறட்சி நிலைமை மேலும் மோசமடையும் என்று அமைச்சர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி திரும்பியதும், வறட்சி நிலைமை குறித்த அறிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் அமைச்சர்கள் வழங்குவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.