தமிழகத்தில் இன்று
போலீஸார் போல நடித்து தனியார் நிறுவன கேஷயரிடம் ரூ. 8 லட்சம் பறிப்பு
சென்னை:
போலீசார் போல் நடித்து தனியார் நிறுவன கேஷியரிடம் ரூ 8 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாப்பான் சத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு தேனாம்பேட்டைசிண்டிகேட் வங்கியில் கணக்கு உள்ளது. அதில் இருந்து 8 லட்ச ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு, நிறுவன ஊழியர்கள் ராம்குமார்(காசாளர்), சரவணன்(டிரைவர்) ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் கார் செல்லும் போது , முந்திச் சென்ற கார் ஒன்று வழி மறித்து நிறுத்தியது. அதில் இருந்து மூன்று பேர்இறங்கினர். தங்களை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் என்றனர்.
ராம்குமாரிடம் பணம் பற்றி விசாரித்தனர். விபரத்தை சொல்லியும் ஏற்காமல், அவரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர். வழியில்ராம்குமாரிடம் இருந்த 8 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, அவரை இறக்கி விட்டுவிட்டனர்.
இச்சம்பவம் பற்றி ராம்குமார் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.