For Daily Alerts
Just In
கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
மே 05, 2000
கண்ணம்மா - என் காதலி-1
(காட்சி வியப்பு)
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா !
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நஷத் திரங்க ளடீ ! (1)
சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே-உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை -உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரியடீ-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்! (2)
சாத்திரம் பேசு கிறாய் -கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரம் கொண்டவர்க்கே -கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் -வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ! இதுபார்
கன்னத்து முத்த மொன்று!
(அடுத்து கண்ணம்மா - என் காதலி -2)
Back To Index