தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை இனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று இங்கிலாந்து விரும்புவதாக இந்தியாவுக்கான அந்நாட்டின் துணைத் தூதர் சர் ராப்யங் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நடந்த 164-வது சென்னை தொழில், வர்த்தக சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், இலங்கையின் அரசியல் சட்டத்திற்கும், ஒருமைப்பாட்டுக்கும் உட்பட்ட வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் தேவைப்பட்டால் இந்தியா உதவலாம். இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
பாலஸ்தீன, இஸ்ரேலிய அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்திய நார்வே நாடு, இலங்கைப் பிரச்சினையிலும் அமைதித் தீர்வு ஏற்பட முயன்றுவருகிறது.இது பாராட்டத்தக்கது. இருப்பினும் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. பல சிக்கல்களைக் கொண்ட சில பிரச்சினைகளுக்குஉடனடியாகத் தீர்வு காண்பது இயலாமல் போய் விடும். இதில் தோல்விகளை மறுப்பதற்கில்லை.
காஷ்மீர் விவகாரம்:
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கும், ஹரியத் அமைப்பினருக்கும் இடையே பேச்சு நடப்பதை இங்கிலாந்து ஆதரிக்கிறது. இது அப்பிராந்தியத்தில்அமைதியை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதை மறுக்க முடியாது. எல்லை கடந்து தீவிரவாதத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான்நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் முன்வர வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை. இதை இரு நாடுகளும் மட்டுமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
பிஜித் தீவில் அமைதி நிலவ வேண்டும். இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. பிஜித் தீவில் புரட்சி நடந்துள்ளதை இங்கிலாந்துஆதரிக்கவில்லை. அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கிலாந்து யோசிக்கும். இதுதொடர்பாக காமன்வெல்த் அமைப்புஉரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
யு.என்.ஐ.