எனது செயல்களுக்கு சாத்தான் தான் காரணம்: குரோனியே
கேப்டவுன்:
கிரிக்கெட் சூதாட்டாக்காரர்களிடம் நான் பணம் வாங்கியதற்கு "சாத்தான் தான் காரணம் என்று கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தென்னாப்பிரிக்ககிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே கூறியுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டாக்காரர்களிடமிருந்து குரோனியே பணம் வாங்கியதாக டெல்லி போலீஸார் புகார் பதிவு செய்தனர். இதை குரோனியேவும் ஒத்துக்கொண்டார். இதையடுத்து குரோனியே, கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது தென்னாப்பிரிக்காவில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்பு, பாதிரியார் ரே மெக்குலி முன்பு குரோனியே கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனதுதவறான செயல்களுக்கு சாத்தான் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
நான் தவறு செய்தபோது, எனது கண்களை சாத்தான் கட்டிப் போட்டு விட்டது. இயேசுவின் உருவத்தை மறைக்கும் வகையில் சாத்தான் இருந்ததால் நான்செய்த தவறு அப்போது எனக்குப் புரியவில்லை.
எனது முட்டாள்தனத்தாலும், பலவீனத்தாலும் சாத்தானிடம் நான் என்னை முழுமையாக ஒப்படைத்து விட்டேன். அதற்குப் பிறகு அதுசொன்னதையெல்லாம் நான் கேட்க நேர்ந்தது என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி எட்வின் கிங் முன்பு விரைவில் குரோனியே வாக்குமூலம் அளிக்கவுள்ளார். இந்த நிலையில் பாதிரியார் முன்பு குரோனியே கூறியதை,வாக்குமூலமாக எட்வின் கிங் அங்கீகரித்துள்ளார். இருப்பினும் இந்த வாக்குமூலம் குறித்து பத்திரிகைகள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கமிட்டிசெயலாளர் கோரியுள்ளார். விசாரணை இன்னும் முழுமையாக துவங்காததால், பத்திரிகைச் செய்தி அதைப் பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சாத்தான் தனது கண்ணைக் கட்டிப் போட்டு விட்டதால், தவறு செய்து விட்டேன் என்ற கூறியுள்ளதன் மூலம், தன் மீதான புகாரை, முதல் முறையாக,முழுமையாக குரோனியே ஒத்துக் கொண்டுள்ளார்.
குரோனியே வாக்குமூலத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சாத்தான் கருத்து குறித்து அது ஏதும்தெரிவிக்கவில்லை.
குரோனியே தவிர, கிப்ஸ், நிக்கி போயே, பீட்டர் ஸ்ட்ரைடம் ஆகியோர் மீது மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஏப்ரல் 7-ம் தேதி டெல்லி போலீஸ்வழக்குப் பதிவு செய்தது. அனைவரும் இந்தப் புகார்களை மறுத்துள்ளனர்.