தமிழகத்தில் இன்று
லாபம் இருந்தால் முதலீடு...ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு
கல்கத்தா:
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி, இனி அதிக லாபம் கிடைக்கும் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்த லாபத்தைக் கருத்தில் கொண்டு இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தவிர, திட்டங்கள் அல்லாத துறைகளிலும் அதாவது தொழில் ஆலோசனை சேவை, அன்னியச் செலாவணி சேவை போன்றவற்றிலும் தனது பணியைவிரிவுபடுத்த ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு செய்துள்ளது.
இருப்பினும் மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் கடன் தொடர்ந்து வழங்கப்படும்.
நடப்பு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அம் முயற்சியில் தனதுபங்காக மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் திட்டங்களான தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல்,ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றிலும் தனது பங்கைச் செலுத்த வங்கி திட்டமிட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.947 கோடிதான் லாபம் கிடைத்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.312 கோடி குறைவாகும்.லாபம் கிடைக்காத மூலதனங்களில் முதலீடு செய்ததால் லாபம் குறைந்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாபம் குறைந்துவிட்டாலும், தனது புதிய திட்டங்களை வங்கி செயல்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications