தமிழகத்தில் இன்று
பெங்களூர் குண்டுவெடிப்பில் இறந்தவர் ஆந்திர நக்சலைட்
பெங்களூர்:
பெங்களூரில் நடந்த வேன் குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த நக்சலைட் என்ற திடுக்கிடும்தகவல் வெளியாகியுள்ளது.
முகமது பயாஸ் ரஹ்மான் சித்திக் என்ற அந்தத் தீவிரவாதி தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கியக்குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சித்திக் முதலில் ஆந்திரப்பிரதேசத்தில் இயங்கும் மக்கள் போர்க குழு அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு குற்றங்கள் புரிந்து வந்தவர். பின்னர் தனது10 கூட்டாளிகளுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே பயிற்சி பெற்றவர்.
விசாரணையில் இவர் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் உள்பட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில்நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது.
இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஜெகஜீவன்ராம்நகரில் செயின்ட் பால் சர்ச்சில் குண்டு வைத்து விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த போது,வேனில் இருந்த மீதி வெடிகுண்டுகள் வெடித்ததில் இவர் பலியாகியிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்துள்ளன.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கிருஷ்ணா உரையாற்றிய சிவாஜிநகர் பசிலிக்கா சர்ச்சில் சித்திக் வெடிகுண்டு வைக்கத்திட்டமிட்டிருந்ததாகவும் போலீசாருக்குத் துப்புக் கிடைத்துள்ளது.
இதுதவிர பெங்களூரில் இக்குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து மூன்று வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கம்ப்யூட்டர் பிளாப்பிடிஸ்குகள், சில தஸ்தாவேஜூகள், வீடியோ-ஆடியோ கேசட்டுகள் போன்றவை முக்கியமான தடயங்களாகக் கிடைத்துள்ளன.
ஐ.எஸ்.ஐ.தீவிரவாதிகளுக்கு இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
யு.என்.ஐ.