தமிழகத்தில் இன்று
எங்கே இருக்கிறார் வைரமுத்து...?
சென்னை:
கவிஞர் வைரமுத்து என்னுடைய நெஞ்சத்திலே இயங்கிக் கொண்டிருக்கிற இயக்கத்திலே இருக்கிறார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய "வைரமுத்து கவிதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி நூலைவெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
வைரமுத்துவை வாழ்த்தி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
வைரமுத்துவின் இயல்புகள் எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் எந்த இயக்கத்திலே இருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறைஎன்னிடத்தில் வைரமுத்து எந்த சின்னத்தை ஆதரிக்கிறார் என்று கேட்டார்கள். நான் மிகுந்த தந்திரத்தோடு, அவர் அடிக்கடி உதயசூரியன் சின்னத்தைப் பற்றிஎழுதுவார் என்று நிறுத்திக் கொண்டு, அவர் எந்த இயக்கத்திலே இருக்கிறார் என்பதை மறைமுகமாக தெரிவித்தேன்.
அதற்காக அவர் அப்பட்டமாக அரசியல் இயக்கமான திமுகவில் இருக்கிறார் என்று பொருள் அல்ல. என்றென்றும் என்னுடைய நெஞ்சத்திலேஇயங்கிக் கொண்டிருக்கிற அந்த இயக்கத்திலே இருக்கிறார் என்று சொன்னால் அது தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.
வைரமுத்து தனது ஏற்புரையில், இங்கே பேசியவர்கள் எல்லாம் நாங்கள் தமிழ் கற்றது கலைஞரின் தமிழ் ஒலி கேட்டுத்தான், அதற்காக நன்றி சொல்லவந்தோம் என்றனர். அவருடைய பெருமை என்பது எது? தமிழகத்தை நான்கு முறை ஆட்சி செய்து கொண்டிருக்கிறாரே அதுவா? ஐந்தாவது முறையும் ஆளப்போகிறாரே அதுவா?.
சங்கத் தமிழா, குறளோவியமா, பொன்னர் சங்கரா, பாயும்புலி பண்டார வன்னியனா, ரோமாபுரி பாண்டியனா, தென்பாண்டிச் சிங்கமா? இதில் எது கலைஞரின்பெருமை? இவைகள் அல்ல அவரின் பெருமை.
இன்றைக்கு தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு இலக்கிய பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறாரே அதுதான் அவரின் பெருமை.
கலைஞரின் எழுத்தை மறந்து விட்டு தமிழகத்தில் எழுத்தாளர்கள் இல்லை என்பது தான் உண்மை. கலைஞரின் பாசம் என்னை உற்சாகமாகவைத்திருக்கிறது.
நான் ஆஸ்திரேலியா சென்றாலும், அமெரிக்காவுக்கு சென்றாலும், அவரோடு ஒரு நாளில் ஒரு தடவையாவது பேசினால், நான் இழந்த ரத்தம் ஊறிவிடுகிறது. ஐந்தாண்டுகளுக்கு தேவையான சக்தியை ஒரு நாள் பேசுகிறபோது அடைகிறேன்.
கலைஞர் என்னை பாராட்டினார். அந்த பாராட்டே போதும். ஒட்டுமொத்த தமிழ்ச் சங்கமே என்னைப் பாராட்டுகிற உணர்வை அடைகிறேன் என்றார்வைரமுத்து.