தமிழகத்தில் இன்று
கே: ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டுள்ளவர்களை. ஆணி வைத்தசெருப்பால் அடிக்க வேண்டும் என்று காளிமுத்து பேசியுள்ளது பற்றி...?
ப: ஹை! இப்படி மறைமுகமாகப் பேசினால் நமக்குப் புரியாதா?ஆணி வாங்குவதில் ஊழல் செய்தால், கட்சியில் நிறையப் பேர் பிழைப்பார்கள் என்றுதிட்டமிடுகிறார்!
கே: சட்டி பானை வாங்கும் போது தட்டிப் பார்த்தும், வெண்டைக் காய் வாங்கும் போது ஒடித்துப் பார்த்தும், மீன்களை அதன் செவுல்களைப் பார்த்தும் வாங்கும்பெண்கள், ஓட்டுப் போடும் போது ஐந்து நிமிஷம் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி யோசனை கூறியுள்ளது பற்றி...?
ப: சட்டி பானையை தட்டிப் பார்த்து வாங்குவது, வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து வாங்குவது, எல்லாம் சரிதான். அதற்காக எலி மருந்து வாங்கும் போது,அதைக் கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தா வாங்க முடியும்?
கே: ஒரிஸ்ஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள நந்தன்கனான் உயிரியல் பூங்காவில் 7 வெள்ளைப் புலிகள் உட்பட 12 புலிகள், மர்ம நோயால்தாக்கப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுவது பற்றி...?
ப: அவை இறந்தது நோயினாலா, அல்லது நோய் தடுப்பு மருந்து என்ற பெயரில் தவறாகக் கொடுக்கப்பட்ட இஞ்செக்ஷனினாலா அல்லது பாதிக்கப்பட்டஉணவினாலா... என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.
எந்தக் காரணமாக இருந்தாலும், நடந்திருப்பது ரொம்பவும் வருந்தத்தக்க நிகழ்ச்சி. இனியாவது இது மாதிரி நடக்காமல் இருக்க, சரியான வழிமுறைகள்காணப்பட வேண்டும்.
புலி, பசித்தால்தான் கொல்லும். நாம் பசி இல்லாமலே, வெறும் அஜாக்கிரதையினால் கூட புலிகளைக் கொல்கிறோம். மனிதன், மிருகத்தை விடக்கேவலமானவன்.
கே: சுயாட்சி என்பது பிரிவினைவாதம் அல்ல: அதிகாரப் பரவலாக்கல் மட்டுமே என்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் விளக்கம் பற்றி...?
ப: மயக்க மருந்து கொடுப்பது ஆபரேஷன் அல்ல:ஆனால் ஆபரேஷனுக்கு வழி செய்து தருவது.
கே: அ.தி.மு.க. பணிகளை செயல்படுத்த அனைத்து சட்டசபை தொகுதிகளலும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற ஜெயலலிதா அறிக்கைபற்றி...?
ப: அந்தக் குழு, உடன் பிறவா சகோதரியின் இஷ்டப்படி அமைந்தால், அவருடைய ஆதரவாளர்களே கட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுவார்கள்.
தேர்தலில் நிற்கும் வாய்ப்பு - அவரை முழுமையாக ஆதரிப்பவர்களுக்கே கிட்டும். அதன் பின்னர் கவலையே இல்லை.
அ.தி.மு.க. ஜெயித்தால் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவருக்கே இருக்கும். அதன் பின்னர், ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் என்றவயதானவர்களுக்கான அ.தி.மு.க. பதவியைத் தவிர, வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
கே; சிவாஜி கணேசன் மீண்டும் காங்கிரசில் சேர வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளாரே ...?
ப: அவர் நிம்மதியாக இருப்பது இவருக்கு பிடிக்காமல் போனதன் காரணம் எனக்குத் தெரியாது.
கே: ஒரு கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், கருணாநிதியிடம் என்ன எதிர்பார்க்கலாம்; என்ன எதிர்பார்க்கக்க கூடாது? அ.தி.மு.க.வுடன் கூட்டணிவைத்தால் ஜெயலலிதாவிடம் என்ன எதிர்பார்க்கலாம்; என்ன எதிர் பார்க்கக் கூடாது?
ப: கருணாநிதியிடம் கணிசமான தொகுதிகளை எதிர் பார்க்கக்கூடாது; இதயத்தில் இடம் பெற முடியும் என்று எதிர் பார்க்கலாம். ஜெயலலிதாவிடம்மரியாதைையை எதிர்பார்க்க முடியாது; நிதி உதவியை எதிர்பார்க்கலாம்.
கே: கழகத்தின் பீஷ்மர் என்ற புதிய பட்டத்தை பேராசிரியர் அன்பழகனுக்கு தி.மு.க.வினர் சூட்டி இருப்பது பற்றி...?
ப: முதல்வர் பதவி என்றுமே கிடையாது - என்று பொருள் காண்க. பீஷ்மர் ஆட்சியைத் துறந்தவர்.
கே: சோனியாவுக்கு மூப்பனார் ஒத்து ஊதுவது: ஜெயலலிதாவுக்கு வீரமணி துதி பாடுவது - என்ன வேறுபாடு?
ப: சோனியாவுக்கு மூப்பனார் தருகிற ஆதரவு - போன ஜென்மத்துக் கடன் ஜெயலலிதாவுக்கு வீரமணி தருகிற ஆதரவு - இந்த ஜென்மம்கடைத்தேற அளிக்கப்படுகிற காணிக்கை.
கே: காங்கிரசிலிருந்து பிரிந்த திரிணாமுல் காங்கிரஸ். த.மா.கா.வை விட வளர்ந்து வருவதற்கு என்ன காரணம்...?
ப: தங்களுடைய கட்சி, காங்கிரஸ் கட்சி தலைமைக்குக் கட்டுப்பட்டது அல்ல - என்பதை அவர்கள் உணர்ந்தது ஒரு காரணம்.
கே: பெரியார் நாத்திகக் கொள்கையை பின்பற்றியதற்கும், தற்போதைய தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகள் நாத்திகக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும் - என்ன வேறுபாடு?
ப: பிராமண எதிர்ப்புக்கு , நாத்திகம் ஒரு கருவியாக பயன்படும். - என்று பெரியார் நினைத்தார். முப்பாட்டன் பயன்படுத்திய பீச்சுவா கத்தி என்று சிலர்வீட்டில் காட்சிப் பொருளாக எதையாவது வைக்கிற மாதிரி - பெரியார் வழி வந்த கழகங்கள், நாத்திகம் என்ற அந்தக் கருவியையே இன்று காட்சிப்பொருளாக வைத்து கொண்டாடுகிறார்கள். ஆக நாத்திகம், பெரியாருக்கு ஆயுதம்: இவர்களுக்கு எக்ஸிபிஷன்.
கே: மூன்றாவது அணியை உருவாக்குவது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியம் அல்ல என்று மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாஸு கூறியுள்ளதுபற்றி...?
ப: பிரதமர் ஆகும் நம்பிக்கையை இழந்து விட்டார் போலிருக்கிறது. அதனால் விரக்தியில் பேசுகிறார்.
கே: மனிதனின் ஆயுளை இனி 1200 ஆண்டுகளாக்க முடியும் - என்ற அளவுக்கு ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே?
ப: அந்த மாதிரி உண்மையாகவே நடந்து விட்டால், அதன் பிறகு மக்கள் - ஒருவர் தலை மீது ஒருவர் நிற்க வேண்டியதுதான். இடமிருக்காது.
கே: ஜாதிக்கொரு கட்சி வைத்துக் கொண்டு மிரட்டுவதை, இனியும் சகிக்க முடியாது என்கிறாரே தமிழக முதல்வர். இதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கைஎடுக்கப்படும்?
ப: தங்கள் கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியேறினால் வெளியேறட்டும் - என்று முதல்வர் முடிவு எடுத்து விட்டதாகத் தோன்றுகிறது என்று முன்புஎழுதியிருந்தேன். என்னுடைய இந்த சந்தேகத்தை, முதல்வரின் இந்தப் பேச்சு மேலும் கிளறி விடுகிறது.
கே: கணிப்பொறி மையத்திற்கு டைடல் என்ற ஆங்கிலப் பெயரை வைத்ததை, தமிழ்ச் சான்றோர்கள் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?
ப: வேண்டாம். இந்த விபரீத கேள்வி வேண்டாம். இப்படிக் கேட்டு தமிழ்ச் சான்றோர்களை உசுப்பி விட்டால், அவர்கள் டைடல் என்பதை தமிழ்ப்படுத்தமுனைவார்கள். டை - என்றால் கழுத்துச் சுருக்கு : டல் என்றால் மந்தம்: அதனால் டைடல் என்றால் கழுத்துச் சுருக்கு மந்தம் என்று பெயரிட்டுவிடுவார்கள். கண்றாவியாகப் போய் விடும்.
கே: நாங்கள் செயலாற்றுவது தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகத்தான் என்று கி.வீரமணி கூறியுள்ளது பற்றி...?
ப: கடவுளே! இந்தத் தலைமுறையைக் கெடுப்பதோடு இவர்கள் திருப்தி அடையக் கூடாதா?அடுத்த தலை முறைக்கும் குறி வைக்கிறார்களே!