தமிழகத்தில் இன்று
நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க ஜெ.மனு
சென்னை:
டான்சி வழக்கு விசாரணையை தீவிரமாக சந்தித்து வருவதால் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கவேண்டும் என்றுதனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக மின்வாரியத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.
தரம் குறைந்த நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து வாங்கி ஊழல் புரிந்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீது தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்த ஜெயலலிதாவை, வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம்மீண்டும் ஜெயலலிதாவை சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
தற்போது டான்சி நிலபேர வழக்கை நான் சந்தித்து வருகிறேன். இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்படும் நிலையில் வாதம் நடந்து கொண்டிருக்கிறது. எனவேநான் முழுக் கவனம் செலுத்தி இந்த வழக்கை சந்தித்து வருகிறேன்.
இச்சூழ்நிலையில் நிலக்கரி வழக்கு 8-ம் தேதி வந்தால் இரண்டு வழக்கையும் நான் சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே, நிலக்கரி ஊழல் வழக்கைஅடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று அந்த மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதேபோல் டான்சி வழக்கிலும் அவர் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், டான்சி வழக்கு விசாரணையில் முன்னாள் தலைமைச்செயலாளர்கள் டி.வி.அந்தோணி, ஹரிபாஸ்கர் ஆகியோர் 1992 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் தொடர்பாக சாட்சியம்அளிக்க வருகின்றனர்.
அதற்கு முன்னால் அவர்களுக்கான நன்னடத்தை விதிகள் கோப்பு தேவை. எனவே அதை நீதிமன்றத்துக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.