தமிழகத்தில் இன்று
ஜெ.யின் பங்களாக்களில் ரூ. 2 கோடிக்கு மின்சாதனப் பொருட்கள்
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் மட்டும் ரூ.1.05 கோடி மதிப்புள்ள ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனப்பொருட்கள் இருந்தன என்று தனி நீதிமன்றத்தில் பொதுப் பணித் துறை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ் வழக்கு விசாரணையில் பொதுப்பணித் துறை அதிகாரி திருத்துவராஜ் வியாழக்கிழமை அளித்த சாட்சியம்:
பொதுப் பணித் துறையில் மதிப்பீட்டுப் பிரிவில் நான் பணியாற்றுகிறேன். ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் தோட்ட வீடு மற்றும்பையனூர், சிறுதாவூர் பங்களாக்களில் உள்ள எலக்ட்ரிக்கல் பொருட்களையும், சாதனங்களையும் மதிப்பீடு செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது.
அதன்படி நான் இந்த வீடுகளுக்கு சென்று மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தேன். சென்னை போயஸ் தோட்ட வீட்டில் மட்டும் லிப்ட், ஏ.சி. உள்ளிட்ட 1கோடியே 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் உபயோகப் பொருட்கள் இருந்தன.
அதேபோல் பையனூர் பங்களாவில் 37 லட்சத்து 13 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. சிறுதாவூரில் உள்ள பண்ணை வீட்டில் 17 லட்சத்து50 ஆயிரம் மதிப்புள்ள மின் உபயோகப் பொருட்கள் இருந்தன.
கிண்டியில் உள்ள நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் 47 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன என்றார்திருத்துவராஜ்.