தமிழகத்தில் இன்று
ஒரு யோகி மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பொறிகளை அடக்கி ஆள வேண்டும். அதற்கு முதலில் வாயைக் கட்டத் தெரிய வேண்டும்.
ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி சொல்கிறேன். டவுன் பஸ்ஸில் போக வேண்டிய ஒருவர் கையில் சில்லறை இல்லை. ஐம்பது ரூபாய் நோட்டு மட்டும்தான்.சில்லறையில்லாமல் ஐம்பது ரூபாய் நோட்டைப் பல்லவனில் நீட்டினால் பல்லவனுக்கே கோபம் வரும். ஐயாவுக்கு ஒரு யோசனை. பக்கத்தில் இருந்தபளபள ஓட்டலில் நுழைந்தார். இன்றைய ஸ்பெஷலை நோட்டம் விட்டார். ஆஹா, கோதுமை அல்வா! வாங்கிச் சாப்பிட்டார். அருமை. பிறகு ஒரு வடை,காப்பி, பில்லும் சில்லறையும் கை மாறியது. பஸ்ஸூக்கு சில்லறைப் பிரச்சனை தீர்ந்தது என்ற கவலை போனது.
ஒரு வாரம் கழித்து அதே வழியாக வருகிறார். சில்லறை நிறையவே இருந்தாலும் ஷோகேஸில் இருந்த அல்வா அவரைப் பார்த்து கண் சிமிட்டியது. நான்அல்வா அல்லவா நீ கொஞ்சம் உள்ள வா! என்று அழைப்பு விட்டது. சம்பாதித்து என்ன கண்டோம்! அல்வாவாவது சாப்பிடுவோம் என்று முடிவுசெய்தார்.அதன் பிறகு எப்போது அந்த வழியாகப் போனாலும் அல்வா அவருக்கு ஆசை காட்டியது.
அந்த அல்வாவுக்கு ஒரு விசேஷம். நாளாக நாளாக நன்றாக இருப்பது அதன் ஸ்பெஷாலிட்டி. கொஞ்ச நாள் போனதும் நண்பர்களிடம் அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார். எப்ப இந்தப் பக்கம் போனாலும் அல்வா சாப்பிடாமல் நான் போனதே இல்லை!
தமது பலவீனத்தைப் பெருமமை போலப் பேச ஆரம்பித்தார்.
திரு.கி.வா.ஜ. சொல்வார்:
முதல் நாள் அல்வாவை அவன் விழுங்கினான். அடுத்த நாள் முதல் அல்வா அவனை விழுங்க ஆரம்பித்தது.
நான் அல்வா என்று நாசூக்காக சொன்னேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு பொருள் அல்வா போல் ஆட்டி வைக்கிறது.
ஆசை நமக்குள் கட்டுப்பட்டிருந்தால் குற்றம் இல்லை. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆசைக்குள் முழுமையாக நாம் சிக்கிக் கொண்டால்யாராலுமே நம்மைக் காப்பாற்ற முடியாது.
பகவான் இராமகிருஷ்ணர் இதைத்தான் அவர் பாஷையில் சொன்னார். படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால்ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
இரண்டாவது இராமகிருஷ்ணராக நம்முடன் வாழ்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் இன்னும் நன்றாக விளக்குவார். நாம காரிலே ஏறலாம்:கார் நம்ம மேலே ஏறக் கூடாது. தம்பி 12 B பஸ்ஸிலே நீ ஏறினா தேனாம்பேட்டை போகலாம். 12 B உன் மேல ஏறினாகிருஷ்ணாம் பேட்டை (சுடுகாடு) போவாய் என்பார்.
எனவே ஆசை நமக்குள் அடக்கமாக இருந்தால் நாம் வசிக்கிறோம்: ஆசைக்குள் நாம் அடக்கமானால் சவ அடக்கம்போலத்தான். காப்பாற்றுவது கடினம். நம்முடைய பொறிகளும், புலன்களும் நாம் சொல்வதை அப்படியே கேட்கவேண்டும். மனது நமது வசப்பட வேண்டும்.
மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு, வாயைத்திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம்மீனைச் சாப்பிடுகிறது ! வண்டு எதனால் அழிகிறது? நாசியின் நறுமணத்தால் பூவில் மயங்கி கிடக்கிறது. பூவோகருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்களை மூடிவிடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின்நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக்கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடக்கிறது. சாகிறது.
அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம் மிக அதிகம். வேடுவர்கள் புல்லாங்குழல்எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலை மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழேநெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாறுமாறாகத் தட்டியதும் துடிதுடித்து அது கீழே விழுகிறது.நெருப்பில் விழுந்ததும் அது வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவுக்குக் காரணம்!
கண்ணாலும் காதாலும் அழிகிற விலங்குகள் போலவே வாயாலும் நாசியாலும் அழிபவை உண்டு. அவை பற்றிபிறகு சொல்கிறேன்!