தமிழகத்தில் இன்று
வெடிபொருள் வெடித்து மொபட் வாலிபர் பலி
உசிலம்பட்டி:
மொபட்டில் வெடிப்பொருட்கள் எடுத்துச் சென்றவர் அது வெடித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன். வயது 37. இவர் வாண வெடிப்பொருட்கள் தயார் செய்பவர். இவர்கோவில் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாணவெடிகளை தயார் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது மொபட்டில் வாணவெடிகளைத் தயார் செய்யும் வெடிப் பொருட்களை எடுத்துச் சென்றார். அப்போது உசிலம்பட்டிஅருகே உள்ள கொக்குடையான்பட்டி, கருப்புக்கோவில் அருகே இருந்த சாலை மேட்டின் மீது மொபட் எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால் மொபட்டில் இருந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் வெடித்துச் சிதறியது. இதில் வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது கை, கால்கள்துண்டு துண்டாகச் சிதறின.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிதறிக்கிடந்த அவரது உடலை எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்துப்போலீஸார் விசாரித்து வருகின்றனர்.