ஜெ. ஆட்சிக்கு வர கேரள அ.தி.மு.க நடத்திய யாகம்
தேனி:
தமிழகத்தில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர சனிப்பெயர்ச்சி தினத்தன்று காங்கிரஸ் பிரமுகர் எஸ்டேட்டில், கேரள அ.தி.மு.க வினர் ரகசிய யாகம்நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் லோயர்கேம்ப் என்னுமிடத்திற்கு அருகில், சுந்தரவடிவேல் சுவாமிகள் என்பவர் விஸ்வஜோதி ஆசிரமம் நடத்திவருகிறார். லட்சக்கணக்கில் பல்வேறு அரசியல் புள்ளிகளுக்கு ரகசிய யாகங்களை இவர் நடத்திக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக, கேரள மாநிலம் முறுக்கடியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும்,ஐ.என்.டி.யு.சி மாநில துணைத் தலைவருமான பிஏ.ஜோசப் என்பவரது எஸ்டேட்டில், சுந்தரவடிவேல் சுவாமிகள் தலைமையில் ரகசிய யாகம் நடத்தப்பட்டது.
மகாசக்தி ராஜமுத்திரை எனக் கூறப்படும் இந்த யாகத்திற்கு 108 வாசனைத் திரவியங்களுடன் காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் பயன்படுத்தப்பட்டது. ஒன்னேகால் மணிநேரம் யாகம் நடந்தது. தமிழகத்தில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்என்பதற்காக இந்த யாகம் நடந்துள்ளது என கேரள அ.தி.மு.க.வினர் கூறினர்.