இப்போது, வீரப்பனின் கோரிக்கையைக் குறை கூறுகிறார் ராமதாஸ்
கோவை:
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இந்தியாவில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மத்திய உள்துறை அமைச்சராகஇருந்த முப்தி முகமதுவின் மகளை காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
சில முக்கிய தீவிரவாதிகளை விடுவித்தால்தான் அமைச்சர் மகளை விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்தியஅரசு அந்த முக்கிய தீவிரவாதிகளை விடுதலை செய்து அமைச்சர் மகளை மீட்டது. இதே போல் இப்போது நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்நடந்துள்ளது.
கடந்த ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கடத்திச் சென்றனர்.
அதன்பிறகு நக்கீரன் கோபால் இருமாநில அரசுகளின் சார்பில் காட்டுக்குச் சென்றார். பின்னர் 10 கோரிக்கைகளை விதித்தார் வீரப்பன். அந்தக்கோரிக்கைகளில் ஒன்றான, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் கூறியிருப்பது தவறானகோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளுக்குப்பின் இருப்பது தமிழ் தீவிரவாதிகள்.
காட்டுக்குள் இருக்கும் வீரப்பன் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்குக் குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வீரப்பனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வரும் வாழப்பாடி ராமமூர்த்திபோன்றவர்களின் கோரிக்கைகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் வீரப்பனோ அல்லது அவரது மனைவியோ அரசியலில் குதிப்பார்கள், அவர்களுக்காக நாங்கள் சீட்கொடுப்போம் என்று கூறுவதெல்லாம் வதந்தி. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அவரது மக்களின் படிப்புச் செலவுக்காக எங்களை அணுகினார்.அவ்வளவுதான்.
அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க., பா.ம.க கூட்டணி தொடரும். தமிழகத்தில் மூன்றாவது அணி தோன்றுவதற்கு பாண்டிச்சேரியில் ஆட்சியைப்பிடிப்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய குறிக்கோளாகும்.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.