பிஜி கலகத் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மீது விரைவில் தேசத்துரோக வழக்கு
வெல்லிங்டன்:
பிஜி தீவில், அனுமதியில்லாமல் ஆயுதங்களை வைத்திருத்தல், தேசதுரோகம் போன்ற குற்றங்கள் புரிந்ததற்காக புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட்டு மீது வழக்குத் தொடரப்பட்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தலைநகர் சுவாவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பைட்தலைமையிலான புரட்சிக்கும்பல் பிணைக்கைதிகளாகப் பிடித்து பாராளுமன்றத்தில் சிறைவைத்தது.
அதற்குப்பின் பிஜி தீவில் இந்தியர் ஒருவர் பிரதமராக இருக்கக் கூடாது, பிஜியின் பூர்வக் குடி மக்களே உயர் பதவியில் அமர வேண்டும் என்றகோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியது.
பிறகு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவத்துக்கும், புரட்சிக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் 56 நாட்களுக்குப் பிறகு பிரதமர்செளத்ரி உள்பட பிணைக்கைதிகள் அனைவரையும் புரட்சிக் கும்பல் விடுவித்தது.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அமைச்சர் ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் பிஜி தீவில் வாழும் இந்தியர்கள் மீதுதாக்குதல்கள் நடந்தது. இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் பலர் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்ற வண்ணம்உள்ளனர்.
இதற்கிடையே புரட்சிக்கும்பல் தலைவன் ஜார்ஜ் ஸ்பைட்டும், அவரது கும்பலைச் சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும், ஆகஸ்ட் 5 ம் தேதி நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போதுஅவர்களிடம் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அடுத்த கட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இவர்கள், தலைநகர் சுவாவிலுள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இவர்கள்மேல் தேச துரோக வழக்கு தொடரப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.