வீரப்பன் எங்கள் கட்சியில் சேரலாம் ... தமிழர் சேனைக் கட்சி
சென்னை:
வீரப்பனை எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தனித் தமிழர் சேனை கட்சி அறிவித்துள்ளது.
தனித் தமிழர் சேனைக் கட்சியின் தலைவர் நகைமுகன், பொதுச்செயலாளர் தேவதாஸ் ஆகியோர் நிருபர்களிடம் பேசினார்கள். அவர்கள் கூறுகையில்,கர்நாடகத்தில் 90 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இது அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதி நீர் பிரச்சனை வரும் பொழுதெல்லாம் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கர்நாடகத்தில் உள்ள தமிழர் நலனை பாதுகாப்பதற்காகத் தான் வீரப்பன் , நடிகர் ராஜ்குமாரை கடத்தி இருக்கிறார்.
பழைய வீரப்பன் என்று கருதி வீரப்பனை சந்திக்கச் சென்ற நக்கீரன் கோபால் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார். அவரை மீண்டும் வீரப்பனைசந்திக்க அனுப்பக்கூடாது.
வீரப்பன் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும். அவரை எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தமிழர் விடுதலைப்படை கூட எங்களிடம் வந்துசேரலாம். ஆனால் அவர்கள் எங்களிடம் வந்த பிறகு ஐனநாயக ரீதியில் தான் செயல்பட வேண்டும் என்று நகைமுகன் கூறினார்.