"டை" ஆனது 2-வது உள்ளரங்கு ஒருநாள் கிரிக்கெட்
மெல்பெர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே மெல்பெர்னில் வெள்ளக்கிழமை நடைபெற்ற இரண்டாவது உள்அரங்கு ஒருநாள் கிரிக்கெட்ஆட்டம் டையில் முடிந்தது.
இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 226 ரன்களை எடுத்தன.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.
95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த அணியை ஜான்டி ரோட்ஸும், மார்க் பாச்சரும் நின்று ஆடி நிலை நிறுத்தினர்.
ரோட்ஸ் 54 ரன்களும், பாச்சர் 51 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கில்லெஸ்பி 3 விக்கெட்டுகளையும் ஹார்வி, சைமண்ட்ஸ் இருவரும் தலா இருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
50 ஓவரில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. 105 ரன்களுக்கு 2விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது.
ஆனால், குளூசனர் மற்றும் போயே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு தடைபட்டது மட்டுமல்லாமல்விக்கெட்டுகளும் தொடர்ந்து வீழ்ந்தபடி இருந்தது.
இறுதியில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. இதனால், இந்த ஆட்டம் டையில் முடிந்தது.
ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாவ், பான்டிங், கில்கிறைஸ்ட் ஆகியோர் நின்று ஆடி ரன்கள் குவித்தனர். இருப்பினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறமுடியவில்லை.
தென் ஆப்பிரிக்க அணியில் போயே, குளூசனர், ஹால் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி ஓவரை ஹால் சிறப்பாகவீசினார். அந்த ஓவரில் இரு விக்கெட்டுகள் வீழ்ந்தன.
3 ஓவர்கள் வீசி 8 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் ஹால் ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கெனவே முதலில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இத் தொடரில் முன்னிலையில் உள்ளது. இத் தொடரின் மூன்றாவது மற்றும்இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.