புதிய தனியார் விமான சேவைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி"
டெல்லி:
விமான சேவையில் ஈடுபடுவதற்கு கிரெளன் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இந்த நிறுவனம் தனது விமானப் போக்குவரத்து சேவையைத் துவக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கிரெளன் எக்ஸ்பிரஸ்நிறுவனத்தைச் சேர்ந்த நீரா ரேடியா இதுகுறித்துக் கூறுகையில், கிரெளன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் உள்ளூர் விமான சேவையை அறிமுகப்படுத்தத்திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய விமானத்துறை அமைச்சகத்திடம் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி விண்ணப்பித்துள்ளோம்.
அதற்கு முன்னதாக ஆட்சேபனையில்லை என்ற சான்றிதழை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வழங்க வேண்டும். அது தற்போதுகிடைத்து விட்டது. எனவே விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
ரூ. 111 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். 111 கோடியில் எங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் 60 சதவீதம் முதலீடு செய்வார்கள்.வெளிநாட்டு கல்வி நிறுவன முதலீட்டாளர்களும் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்வார்கள். வென்சர் கேப்பிடல் நிதி மூலமும் இந்தத் திட்டத்திற்கு முதலீடுகிடைக்கும் என்றார் ரேடியா.
1993 லிருந்து இந்தியாவில் தனியார் விமானச் சேவை இயங்கி வருகிறது. ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் ஆகிய இரணடு தனியார் விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கும் முக்கிய தனியார் விமான சேவை நிறுவனங்களாகும்.
அதிக முதலீடு தேவைப்படும் இந்தத்துறையில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமேதாக்குப்பிடித்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.