ஊழல் வழக்கில் கேரள முன்னாள் அமைச்சர் கைது
திருவனந்தபுரம்:
ஊழல் வழக்கில் கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை கைது செய்யப்பட்டார்.
கேரள காங்கிரஸ் கட்சயின் (பி) தலைவராக இருப்பவர் ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
1984-85 ம் ஆண்டு பாலகிருஷ்ண பிள்ளை மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பெங்களூரில் உள்ள கிராபைட் கம்பெனிக்கு முறைகேடாகமின்சாரம் வழங்கியது தொடர்பாக பாலகிருஷ்ண பிள்ளை மீதும், கேரள மாநில மின்சார வாரிய தலைவராக இருந்த பி.கேசவ பிள்ளை மீதும் புகார்கூறப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருவருக்கும் தலா 1 ஆண்டு கால தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ம் தேதி விசாரணை நடந்தது.
இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்என்று பாலகிருஷ்ண பிள்ளை தரப்பு வக்கீல் வேண்டுகோள் விடுத்தார். இதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ண பிள்ளையைக் கைது செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் கேரள முன்னாள் அமைச்சர்பாலகிருஷ்ண பிள்ளை வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே பாலகிருஷ்ணபிள்ளை மீதான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.