வீரப்பன் சரணடைய வேண்டும் ... ராமதாஸ்
தூத்துக்குடி:
நடிகர் ராஜ்குமாரை ஒப்படைத்து விட்டு சந்தன வீரப்பன் சரண் அடைய வேண்டும் என்று பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி அருகே சாகுபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சந்தன மரக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமாருடன் தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் சரண் அடைய வேண்டும். அப்படி சரண் அடைந்தால் அவர்திருந்தி வாழ ஒரு வாய்ப்பு அளிக்கலாம்.
நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதம் ஏற்படுவது கர்நாடக தமிழர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். ராஜ்குமார் விடுதலை ஆனதும் ராமதாஸ்,வைகோ பற்றி சில உண்மைகளை வெளியிடுவேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி கதை அளந்து வருகிறார். அவர் சொல்வதை இப்போது யாரும் காதுகொடுத்து கேட்பதில்லை. எனவே அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பா.ம.க இரண்டாவது பெரிய கட்சியாக மாறும். வரும் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் தான்நீடிப்போம். த.மா.கா போல் ஆட்சியில் பங்கு கேட்கவும் மாட்டோம். அப்படியே கொடுத்தாலும் சேரவும் மாட்டோம் என்றார் ராமதாஸ்.