ஆந்திராவில் கன மழைக்கு 60 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அடை மழைக்கு இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளைஇழந்துள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் ஆற்று நீர் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் தடைபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும்ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஹைதராபாத் விமானநிலையத்தின் அருகேயுள்ள இந்திரம்மா காலனி முழுவதும் மழை நீரால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு வாழும்மக்கள் அனைவரும் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர்கள் மற்றும் விமானத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பலகுடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
குன்டூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஆழமான மழை நீரில் சிக்கிக்கொண்டதில் 50 பயணிகள் பஸ்சின் கூரை மீதுதத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை 2 விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்டன.
யு.என்.ஐ.