குழந்தையின் வாய், கழுத்தை உடைத்து! முகத்தை கற்களால் சிதைத்து! கோவை சூலூர் சிறுமியின் சித்தி கண்ணீர்
கோவை: கோவை சூலூரில் 10 வயது சிறுமியின் வாய், கழுத்தை உடைத்து, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக அவரது சித்தி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களும் எலும்பு முறிவுகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தவெக ஆட்சியிலும் இது போன்ற ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுக்க கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உடலை பார்த்த அவரது சித்தி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குழந்தையின் வாய், கழுத்தை உடைத்திருக்கிறார்கள். குழந்தைக்கு உடல் முழுக்க காயமாக இருக்கிறது. கை, கால்களையும் உடைத்துள்ளனர்.
முகத்தை அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கல்லால் அடித்து சிதைத்திருக்கிறார்கள். இரவு முழுக்க குழந்தையை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். அந்த குளத்து பகுதியிலேயே இரவு முழுக்க குழந்தையை வைத்திருந்திருக்கிறார்கள்.
முந்தாநாள் காணாமல் போன குழந்தை, நேற்று மாலை 6 மணிக்குத்தான் கிடைத்தாள். சரியாக தேடியிருந்தால் எங்கள் குழந்தை நல்லபடியாக கிடைத்திருக்குமோ என்னவோ, முகத்தில் ஆங்காங்கே ஓட்டைகளாக இருக்கிறது.
முதல்வர் விஜய், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அதுவும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் குடும்பத்திற்கு ஏதாவது நிவாரணம் தர வேண்டும். இவ்வாறு சிறுமியின் சித்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
நடந்தது என்ன?
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.
போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று இரவு சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் கார்த்திக்கைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்குத் தான் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொலை செய்ததை கார்த்திக் ஒப்புக் கொண்டார்.
மேலும், இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தெரிந்திருந்தும், அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications