காட்டிலிருந்து ரஜினிக்கும் ஒரு கேஸட் !
சென்னை:
காட்டுக்குள் வீரப்பனையும், ராஜ்குமாரையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய நக்கீரன் கோபால், ரஜினிக்கு ஒரு கேஸட்டைக் கொண்டு வந்துள்ளார்.
சென்னையில் நிருபர்களை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தார் நக்கீரன் கோபால். அப்போது வீரப்பன் விவகாரத்துல ரஜினிக்கு என்ன ரோல் என்றுநிருபர்கள் கேட்க, நல்ல ரோல் கொடுத்திருங்காங், மிக முக்கியமான ரோல் அது என்றார் கோபால்.
நான் காட்டுக்குச் சென்றபோது ராஜ்குமாருக்கு ரஜினி காந்த் ஒரு கேஸட் கொடுத்தனுப்பினார். கேஸட்டில் முதலில் தமிழில் பேசிய ரஜினிகாந்த், பின்னர்கன்னடத்தில் பேசியிருந்தார்.
ராஜ்குமார் நல்லபடியாக காட்டிலிருந்து திரும்ப தான் பிராத்திப்பதாகவும், உடல் நலத்தை கவனித்துக்கொள்ளும் படியும் அதில் ரஜினி பேசியிருந்தார்.
காட்டில் ராஜ்குமாரைச் சந்தித்த நான் உங்களுக்கு ரஜினிகாந்த் கேஸட் கொடுத்தனுப்பியுள்ளார் என்று அவரிடம் கூறினேன்.
உடனே உற்சாகமாக அந்த கேஸட்டை காதில் வாக்மேன் மாட்டிக் கேட்க ஆரம்பித்தார் ராஜ்குமார்.
மிக நல்ல நண்பர் ரஜினி. அவர் எப்படி இருக்கிறார் என்று ராஜ்குமார் விசாரித்தார். ராஜ்குமாரும் பதிலுக்கு ரஜினிக்கு ஒரு கேஸட் கொடுத்து அனுப்பியுள்ளார்.
நான் மிக நன்றாக இருக்கிறேன். பத்திரமாக திரும்பிவருவேன் என்று அதில் ராஜ்குமார் பேசியிருக்கிறார். அந்த கேஸட்டை ரஜினிகாந்திடம்கொடுத்துவிட்டேன் என்றார் கோபால்.