கீதையின் பாதையில் சமநிலை - அதுவே சரி நிலை
சுகி - சிவம்
சமநிலைக்கு மற்றும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தண்டனைக்குரிய கைதிக்காக வாதாடிக் கொணடிருந்த போது வழக்குரைஞரின் மனைவி மரணம்அடைந்த செய்தி தந்தி வழி வந்து சேர்ந்தது. படித்துவிட்டு, பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டு வழக்கைத் தொடருகிறார்.
வழக்குரைஞர் இந்தியத் தவப்புதல்வர்களில் ஒருவரான இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்! முடிந்து போன மனைவிக்காகப் பதறித் துடிப்பதை விட,காப்பாற்றப்பட வேண்டிய உயிருக்காகக் கடமையாற்றும் சமநிலையில் இருந்தார் அவர். இரும்பு மனிதரின் வாழ்க்கை, இந்திய இளைஞனுக்குப்பாடமாகட்டும்.
துன்பத்துக்கும் உயிருக்கும் பண்டமாற்று செய்யும் வாழ்க்கைச் சந்தையில் சில பேர் இன்பத்துக்கும் உயிரை விற்கிறார்கள். இது பெரிய வேடிக்கைஅல்லவா? இரண்டு லட்ச ரூபாய் லாட்டரி குலுக்கலில், ஒரு இருதய நோயாளிக்குப் பரிசு கிடைது விட்டது.
பரபரப்பான இந்தச் செய்தியை அவரிடம் சொல்ல வந்த குடும்பத்தாரை டாக்டர் கடிந்து கொண்டார். திடீர் என்று சொன்னால் இந்த மகிழ்ச்சியை அவர்இதயம் தாங்காது என்று விளக்கி, தாமே சொல்வது என்று தீர்மானித்தார். வெவ்வேறு விஷயம் பேசிவிட்டு சிரித்தபடி கேட்டார்.
உங்களுக்கு லாட்டரியில் இருநூறு ரூபாய் விழுந்தால் என்ன செய்வீர்கள்?
எங்கே விழப் போவுது ... விழுந்தா நீங்க எழுதின மருந்து எல்லாத்தையும் வாங்குவேன் என்றார் நோயாளி.
ஒரு பத்தாயிரம் விழுந்தால்... இழுத்தார் டாக்டர்.
வீடு ஒழுகுது. ரிப்பேர் செஞ்சிருவேன் என்றார் அவர்.
லட்ச ரூபாய் விழுந்தால்?
பொண்ணு கல்யாணத்தை முடிச்சிருவேன். கவலை இல்லை.
இரண்டு லட்ச ரூபாய் நிஜமாகவே விழுந்தால் என்னதான் செய்வீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் என்று இறுதியாக விஷயத்துக்கு வந்தார் டாக்டர்.
என்ன செய்வேன்... எவ்வளவு நல்ல டாக்டர் நீங்க ... சாவிலிருந்து என்னைக் காப்பாற்றியவர். அதனால ஒரு லட்ச ரூபாய் உங்களுக்கேகொடுத்துவிடுவேன் என்றார் நோயாளி.
அடுத்த விநாடி ஆ என்ற அலறல். நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி விழுந்தார் டாக்டர்? அந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்காமல் டாக்டரது இருதயம் நின்று போய்விட்து!
துன்பம் நம்மைப் பாதுகாப்பது போல இன்பமும் பாதிப்பதை விளக்கவே இந்த உதாரணம் சொன்னேன்.
சுகமும், துக்கமும் இரண்டுமே ஆபத்தானவைதான். சுகமே துக்கமானது. சர்க்கரை வியாதிக்காரருக்கு இனிப்பான சர்க்கரையே எமனாவதுஇல்லையா? அது போல் சுகமும் துக்கம்தான்.
அப்படியானால் துக்கம் சுகமாகாதா என்று கேட்கத் தோன்றும். குடிகாரனுக்கு சாராயம் ஆரம்பத்தில் சுகம் போல தோன்றும். முடிவில் அதுவும்துயரத்தையே தரும். எனவே சுகமும் துக்கத்தைத் தரும். துக்குமும் துக்கத்தையே தரும்.
சுகம் துக்கம் இரண்டிலும் இருந்து சம தூரத்தில் விலகி நிற்கும் சமநிலையை சரியான வாழ்க்கை முறை.
சமநிலைதான் சரியான வாழ்க்கை வழி. ஒரு நிமிட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு வாழ்நாள் எல்லாம் வருந்துவது.... ஒரு நொடி இரக்கத்தில் ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு விட்டு வாழ்வெல்லாம் அவளையும் அழவைத்து தானும் அழும் முட்டாள்தனம்... ஒரு நொடி
இன்பம் கருதி ஒரு முழுவாழ்க்கையை நாசமாக்கும் மிருக வெறி ... இவையாவும் ஸ்திதப்ரக்ஞனுக்கு இல்லை.
அவனது வாழ்க்கை முழுவதும் ஒரு தவம். ஒரு யோகம்... ஒரு பரிசுத்தமான யாகம்!
ஒரு விபத்து நடந்து விட்டது. விபத்தில் சிக்கிக் கொண்டவர்களால் அது, எப்படி நடந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியாது. அவர்கள்பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் விபத்தின் ஓர் அங்கம். எனவே விபத்து பற்றிய முழுமையான பார்வை அவர்களுக்கு வாய்க்காது.
ஆனால் பாதுகாப்பான தூரத்தில் நின்று பதற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எவ்வாறு இந்த விபத்து நடந்தது என்பது நன்கு தெரியும்.
அதுபோலத்தான் வாழ்க்கைச் சம்பவங்களில் விலகி நின்று பார்ப்பவர்கட்கே இது ஏன் இப்படி நடந்தது என்கிற உண்மை புரியும். இத்தகையஉணர்வுபூர்வமான விலகல்தான் சமநிலை என்று யோக நூல்களில் வர்ணிக்கப்படுகிறது.
ஒரு சினிமா பார்க்கிறோம் ... அதில் வரும் ஒரு பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்கள் சினிமாவின் சகல அம்சங்களையும் ரசிக்க முடியாது. அந்தப்பாத்திரத்தின் துக்கத்தோடு அழவும், சிரிப்போடு சிரிக்கவும் மட்டுமே முடியும்.
கொஞ்சம் விலகி நின்றால்தான் மெல்லிசை, காமிரா, வசனம், டைரக்ஷன், நடிகர்களின் பலவித நடிப்பாற்றல் என்று எல்லாவற்றையும் ரசிக்கமுடிகிறது.ரசனைக்குரியாதாகிறது.
சமநிலைதான் வாழ்க்கைச் சுவையை மேலும் சுவையுடையதாக்குகிறது; நியாயம் உடையதாகவும் ஆக்குகிறது.(தொடரும்)












Click it and Unblock the Notifications