"கூடங்குளம் அணு மின் நிலையம் 2002 முதல் இயங்கும்
சென்னை:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் வரும் 2002 -ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று அணுசக்தித் துறை தலைவர்சதுர்வேதி தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் சார்பில் சுற்றுச் சூழல் பற்றிய கருத்தரங்கம்நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மத்திய அணுசக்தித் துறைத் தலைவர் சதுர்வேதி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், தென் மாநிலங்களின் மின் தேவை 20ஆயிரம் மெகாவாட் அளவிற்கு விரைவில் உயரும்.
இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியை துவங்குவதற்கு பல நெருக்கடிகளை அணுசக்தித் துறை சந்தித்து வருகிறது.
இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையத்தால், சகஜ வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராது. சுற்றுச் சூழல்பாதிப்புகளையும் இந்த நிலையம் ஏற்படுத்தாது.
இந்த நிலையம் அமைந்துள்ள இடத்தின் சுற்றுப்பகுதிகளில் 40 சதவீதம் அளவிற்கு மன்னார் வளைகுடாவும், 60 சதவீதம் தரிசு நிலங்களாகவும் உள்ளன.இதனால் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு இடமே இல்லை.
இந் நிலையத்தில் அமைக்கப்படும் மின் ரியாக்டர்களால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கும், மீனவர்களின் மீன் பிடித் தொழிலுக்கும் எந்த விதமானபாதிப்பும் ஏற்படாது.
எனவே இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2002-ல் இந் நிலையம் உற்பத்தியைதொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.