வாழப்பாடியின் வன்னியர் மாநாடு .. கோபத்தில் ராமதாஸ்
சென்னை:
ஏக கோபத்தில் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இந்த முறை ராமதாஸின் கோபத்திற்குக் காரணம் புதன்கிழமை சென்னையில் வாழப்பாடிராமமூர்த்தி நடத்தும் வன்னியர் விழிப்புணர்வு மாநாடு.
வாழப்பாடி ராமமூர்த்தி, தீரன் எம்.எல்.ஏ, வன்னிய அடிகளார் என்று பலர் திரண்டு நடத்துகிறார்கள் இந்த மாநாட்டை. டாக்டர் ராமதாஸூக்குஎதிராக வன்னியர் சமுதாய மக்களை திரட்டும் முயற்சி என்று நினைக்கிறார் ராமதாஸ்.
வாழப்பாடி மட்டுமல்ல, அவருக்கு பின்னனியில் தமிழக முதல்வர் கருணாநிதியும் செயல்படுகிறார் என்கிற கோபம் தான் தற்பொழுது ராமதாஸூக்குஇருக்கிறது என்கிறார்கள் பா.ம.கட்சிப் பிரமுகர்கள்.
தி.மு.கவுடன், பா.ம.க கூட்டணியில் இருக்கும் என்று கலைஞர் எதிர்பார்த்தார். பா.ம.க தரப்பில் இருந்து அதிகமான சீட்கள் கேட்போம் என்றவுடன்.அதை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்தார். தவிர, வாழப்பாடி ராமமூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே, ராமதாஸுக்கு எதிராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்கிற அடிப்படையில் , வாழப்பாடி ராமமூர்த்தியை தனியாக ஆதரிக்க ஆரம்பித்தார் கலைஞர்.
"ஒரே கூட்டணியில் இருக்கிறோம். வாழப்பாடி ராமமூர்த்தியை விட எங்கள் கட்சி பெரியது. ஐந்து எம்.பிக்கள், இரண்டு மத்திய அமைச்சர்கள்தமிழகத்தில் அ.தி.மு.க , தி.மு.கவுக்கு அடுத்த கட்சி நாங்கள் தான். இந்த நிலையில் தான் இதற்கு மேலும் நாங்கள் வளரக்கூடாது என்று , வாழப்பாடிராமமூர்த்தியை ஊக்குவிக்க ஆரம்பித்தார் கலைஞர்.
புதன்கிழமை நடக்கவுள்ள வன்னியர் எழுச்சி மாநாடு கூட இதன் அடிப்படையில் நடத்தப்படுவதுதான். தேர்தலுக்கு முன் வன்னிய சமுதாய மக்களைராமதாஸுக்கு எதிராக திருப்பி விட திட்டம் போடுகிறார்கள் கலைஞரும், வாழப்பாடி ராமமூர்த்தியும். இது நடக்காது.
கலைஞரின் செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வன்னியர் எழுச்சி மாநாட்டிற்கு, அரசு சார்பில் பல உதவிகள் செய்யப்படுகிறது. தி.மு.கவில் உள்ளபிரமுகர்களிடம் கலைஞரே வாழப்பாடி ராமமூர்த்தியின் மாநாடு சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதற்காக திமுகவினரும் களத்தில் இறங்கி, மாநாட்டை வெற்றிகரமாக்க வாழப்பாடி ராமமூரதியோடு கைகோர்க்கிறார்கள். இதையெல்லாம்கவனமாக பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம் என்று பொரிந்து தள்ளுகிறார்கள் பா.ம.கவினர்.