வாரியத்தை விமர்சிக்க கபில் தேவ் யார்? கேட்கிறார் ஏ.சி.முத்தையா
சென்னை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை விமரிச்சிக்க கபில் தேவுக்கு எந்த தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என்று வாரியத் தலைவர்ஏ.சி. முத்தையா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில் தேவ் தனது பதவியை சில நாட்களுக்கு முன் ராஜிநாமா செய்தார். இது தொடர்பாக வாரியத்தலைவர் முத்தையாவுக்கு அவர் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி குறை கூறியிருந்தார்.
கபில்தேவின் ராஜிநாமா குறித்து ஏ.சி. முத்தையா கூறியதாவது:
கபில்தேவ் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,அவர் சிறந்த பயிற்சியாளராக இந்திய அணிக்கு இருக்கவில்லை. அவர் பயிற்சியாளராகஇருந்தபோது சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.
நல்ல நிர்வாகியாகவும் அவர் இருந்ததில்லை. இந்த நிலையில் அவர் வாரியத்தின் நிர்வாகம் குறித்து விமர்சிக்கத் தகுதியில்லை.
பயிற்சியாளர் பொறுப்பை சரிவர கவனிக்காத கபில்தேவுக்கு, கிரிக்கெட் வாரியத்தைப் பற்றி குறைகூற எந்தத் தகுதியும் இல்லை.
இருப்பினும், கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்கஅழைக்கும்படி வாரியச் செயலர் லேலேயிடம் நான்தான் கூறினேன்.
ஆனால் கபில் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். தான் ராஜிநாமா செய்யப்போவது பற்றி கபில்தேவ் முன்பே தகவல் ஏதும்தெரிவிக்கவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தாற்காலிக ஏற்பாடுதான். இந்திய அணிக்கு வெளிநாட்டுப்பயிற்சியாளரை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின்போது பயிற்சியாளர் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை இந்திய அணியின்பயிற்சியாளராக கெய்க்வாட் நீடிப்பார் என்றார் முத்தையா.