கோவை குண்டுவெடிப்பு: கோர்ட்டில் ஆஜராக கைதிகள் மறுப்பு
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜராக கைதிகள் மறுத்து விட்டனர். பின்னர் அதிகாரிகள் சமாதானத்தின் பேரில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர்.வழக்கு விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோவையில் கடந்த 98ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஆனால், கடந்த முறை இந்த குண்டு வெடிப்புக் கைதிகள் அறிவித்தபடி நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்தனர். மேலும் காலையில் உண்ணாவிரதம் இருக்கமுயற்சி மேற்கொண்டனர்.
காலை உணவைப் புறக்கணித்து நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததையடுத்து சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சமாதானமுயற்சியில் இறங்கினர்.
அப்போது சிறைக் கைதிகள் அதிகாரிகளிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதியை மாற்றவேண்டும்.
மேலும், எல்லோரையும் ஒரே அறையில் அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.அதிகாரிகளின் தீவிர முயற்சிக்கு பின்னர், மாலை 4 மணி அளவில் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு கைதிகள் 167 பேரும் ஆஜராயினர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம், வக்கீல்கள் நியமிக்காத 51 பேரும் வக்கீல் நியமித்து விட்டீர்களா எனக் கேட்டார்.அதற்கு அவர்கள் கலந்து ஆலோசனை செய்ய ஒரே அறையில் அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், நீதிபதி இதனை ஏற்க மறுத்து, வழக்கை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். உடுமலை குண்டு வெடிப்பு வழக்கையும், செப்டம்பர் 25ம்தேதிக்கு ஒத்தி வைத்து விட்டு இருக்கையை விட்டு எழுந்து சென்று விட்டார்.
இதையடுத்து, மதானி நீதிமன்றத்தில், இந்திய ஜனநாயக நாட்டில் நீதித் துறையின் மீதுள்ள நம்பிக்கை போய் விட்டதாகவும், உடனடியாக எந்த தண்டனைகொடுத்தாலும், அது தூக்குத் தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார். மேல் முறையீட்டில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனஅதிகாரிகளிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து, அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.