ஆசிரம விவகாரம்: போராட்டத்தில் குதித்துள்ள பொதுமக்கள்
மதுரை:
ஆசிரம விவகாரத்தால் ஆத்திரமடைந்த அழகாபுரி கிராம மக்கள் ஆசிரமத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை சிபிசிஐடி போலீஸார் ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்தனர்.
சிபிசிஐடி போலீஸார் ஆசிரமத்தில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த சாமி படங்களுக்கு பின்பக்கம் துளை போட்டுப் பார்த்தனர்.
பின்னர் ஆசிரமத்தின் வெளியே நாகர்பீடம் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் இதே போல் சோதனை நடத்தினர். அங்கு ஏதாவது பிணங்கள்புதைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட சாமியார் மற்றும் குற்றவாளிகளை ஆசிரமத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷம் போட்டனர்.
ஆசிரமத்துக்கு குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டனர். கற்களை வீசியும் மறியல் நடத்தினர். இதனால் ஆசிரம பகுதியில் பதட்டமான சூழ்நிலைஏற்பட்டது.
சோதனையில் ஈடுபட்ட டாக்டர் தியாகராஜன் கூறியதாவது:
இங்கு 12 இடங்களில் 5 அடி ஆழத்துக்கு கம்பியால் துளை போட்டு பார்த்தோம். பிணங்கள் புதைக்கப்பட்டு இருந்ததற்கான எந்த அறிகுறியும்தென்படவில்லை.
ஒரு துளி ரத்தம் இருந்தால்கூட கண்டுபிடித்து விடுவோம். இன்னும் பல இடங்களில் தோண்டிப் பார்க்க உள்ளோம் என்றார்.
சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜன் கூறியதாவது:
ஆசிரமத்தில் முழுவீச்சில் சோதனை நடந்து வருகிறது. சாமியார் நளினசேகரனை எங்களிடம் ஒப்படைத்த பிறகு தீவிர புலன் விசாரணை நடத்தப்படும்.குற்றவாளிகள் யாரையும் தப்ப விட மாட்டோம் என்றார்.
பொதுமக்கள் ஆவேசம்:
ஆசிரமத்தைச் சுற்றிலும் கிராம மக்கள் மரங்களை வெட்டி போட்டும், கற்களை போட்டும் தடை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால் ஆசிரமத்தில் உள்ள போலீஸ் வாகனங்கள், நிருபர்களின் வாகனங்கள், போட்டோகிராபர்களின் வாகனங்கள் ஆகியவை வெளியே செல்லமுடியாமல் சிறை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அழகர்கோவில்-மேலூர் மெயின்ரோடு பகுதிகளிலும், கற்களையும், மரங்களையும் போட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரமத்தின் வளாகத்திலுள்ள டியூப் லைட்டுக்களை பொதுமக்கள் ஆத்திரத்தில் உடைத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம்நிலவுகிறது.