மதுரையில் மொத்தம் 7 பஸ்கள் உடைப்பு: அழகிரி ஆதரவாளர்கள் செயல்
மதுரை:
தி.மு.க.வினர் அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்சித் தலைமை தெரிவித்ததையடுத்து மதுரை முழுவதும் கலவரம்ஏற்பட்டுள்ளது. 7 பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன.
மாட்டுத்தாவணி மற்றும் பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டுகளில் இரண்டு அரசு பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இச்சம்பவத்தில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
வில்லாபுரம் பகுதியில் மினிபஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. பொன்மேனி பகுதியில் இரண்டு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறைக்கும்பல்அந்த பஸ்களுக்கு தீ வைக்க முயலுமுன் அங்கு போலீஸார் சென்று விட்டனர்.
அவனியாபுரம் பகுதியில் பஸ் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 92 பேரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
அரசு பஸ்கள் உள்பட மொத்தம் 7 பஸ்கள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பஸ்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கிராமாந்திரப் போலீஸார் இதுவரை 110 பேரைக் கைது செய்துள்ளனர். அதே நேரம் அழகிரி, கட்சி தலைமையின் முடிவு குறித்து ஆத்திரத்தில்தொண்டர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.