வீரப்பன் கோரிக்கை.. அரசைக் குறை கூறுகிறார் தமிழ்த் தீவிரவாதி
தர்மபுரி:
வீரப்பன் விடுவிக்கக் கோரியவர்களை விடுவிப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று தீவிரவாதி பொன்னிவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இவர்களில் வீரப்பன் விடுவிக்கக்கோரிய தீவிரவாதிகளில் பொன்னிவளவனும் ஒருவர். இவர் தர்மபுரி கொளகத்தூர் வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமைதர்மபுரி முதலவாது ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடக்கும் நிலையில் அரசுத் தரப்பு சாட்சியங்களுக்கு கோர்ட் அனுப்பிய சம்மன்கிடைக்கவில்லை என்று கியூ பிராஞ்ச் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்னிவளவனை அக்.9 ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி குணவதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறைக்குத் திரும்பும் வழியில்பொன்னிவளவன் நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பன் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. கோர்ட்நடவடிக்கைகள் அனைத்தும் அரசு உத்தரவுப்படியே நடப்பதாக சந்தேகிக்கிறேன்.
அரசு விடுவிக்கும் வரை நான் காத்திருக்க முடியாது. எனவே வக்கீல் மூலம் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகிறேன் என்றார் பொன்னிவளவன்.