கேரளாவிற்குக் கடத்தப்பட்ட 18 மாடுகள் மீட்பு
கோவை:
கோவையிலிருந்து கேரளாவிற்கு நடக்கும் கடத்தலைத் தடுக்க கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் நள்ளிரவில் திடீர் சோதனை மேற்கொண்டார்.இதில், மாடுகளைக் கடத்திச் சென்ற லாரிகளை மிருகவதைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி, சந்தனக் கட்டைகள், மாடுகள் உட்பட பல்வேறு கடத்தல்கள் நடப்பது குறித்து கோவை மாவட்டகலெக்டருக்குப் புகார் வந்தது.
சட்ட விரோதமாக நடக்கும் இந்தக் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கினார். நள்ளிரவுசோதனையில் ஈடுபட முடிவு செய்தார்.
கடத்தல் நடக்கும் வழிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்குசோதனை மேற்கொண்டார். அப்போது பழனியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியை பிடித்து விசாரணை செய்தார். அந்த லாரியில் 18மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த லாரியைத் தொடர்ந்து மேலும் 3 லாரிகள் வந்தன. இவற்றையும் கலெக்டர் சோதனையிட்டு பறிமுதல் செய்தார். லாரிகளை ஓட்டி வந்தபொள்ளாச்சியைச் சேர்ந்த திருமலைசாமி (48), திருச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் (23), பழனியைச் சேர்ந்த குணசேகரன் (28), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தமுருகானந்தம் (28), பரமசிவம் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ரூ. 1.5 லட்சம் அரிசி பறிமுதல்:
இதே போன்று ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர். பொள்ளாச்சி அருகே ஆனைமலை அருகேபோலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
135 மூடை ரேஷன் அரிசியுடன் கேரளாவிற்குள் நுழைய முயன்ற லாரியைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி மற்றும் அரிசியைக் கைப்பற்றினர்.
இது தொடர்பாக பழனியைச் சேர்ந்த தில்லையப்பா (26), மாரியப்பன் (27), லாரி உரிமையாளர்கள் செந்தில்மணி (28), திருவேங்கடம் (24),பொள்ளாச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.