ஆந்திராவில் கன மழை .. பூண்டி ஏரி நிறைகிறது
சென்னை:
கன மழை காரணமாக சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்துள்ளது.கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்குவினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வருகிறது.
சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்துதண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
எதிர்பாராத விதமாக ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக, பெண்ணாற்றில்வெள்ளம் கரை புரண்டு ஓடி சோமசீலா அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
அணை நிரம்பியதும் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பூண்டிஏரிக்கு வரும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கண்டலேறு அணையில் இப்போது 10.5 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இந்த அணையில்இருந்து வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தமிழக எல்லையான ஸீரோ பாய்ன்ட்டில் புதன் கிழமை நிலவரப்படி 400 கன அடிவீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து தண்ணீர் வருகை அதிகரித்து வருவதால் பூண்டிஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியில் 26 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியில் இருந்துசெங்குன்றம் ஏரிக்கு வினாடிக்கு 190 கன அடி தணணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியில் இருந்து செங்குன்றம் ஏரிக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 90 கனஅடியும், இன்னொரு பெரிய கால்வாய் மூலம் வினாடிக்கு 100 கன அடியும் தண்ணீர்திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியின் நீர் இருப்பு 30 கோடி கன அடியை தாண்டினால் தான் பெரியகால்வாயில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்க முடியும். ஆனால், சென்னைநகர குடிநீர் பிரச்னையை சமாளிக்க தண்ணீர் தேவை இருப்பதால் பூண்டி ஏரியில் 30கோடி கன அடி தண்ணீர் சேரும் வரை காத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் பூண்டி ஏரியில் 30 கோடி கன அடி நீர் நிரம்பி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பேபி கால்வாய் அடைக்கப்பட்டு பெரியகால்வாய் மூலம் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும்.