தன்மானமா, அதிமுக கூட்டணியா: தடுமாறும் த.மா.கா
சென்னை:
சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த பெரியார் விழாவில் திரளாக பங்கேற்ற அதிமுக, டெல்லியில் மூப்பனார்தலைமையில் நடந்த பெரியார் விழாவை அடியோடு புறக்கணித்தது. இதன் மூலம் அதிமுகவுக்கும் தமாகாவுக்கும் இடையேஇருந்து வரும் உரசல் வெளியே தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் மகா கூட்டணி அமைய சென்னையில் நடந்த பெரியார் விழா அடித்தளம் அமைந்துவிட்டதாக தோழமைத் தலைவர்கள் எல்லாரும் பெருமிதப்பட்டனர். அந்த அளவுக்கு அந்த விழாவில் ஜெயலலிதா, மூப்பனார்,குலாம்நபி ஆசாத், ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பரதன், நல்லகண்ணு, சங்கரய்யா, அப்துல் லத்தீப், கி.வீரமணி என்று தலைவர்கள்பட்டாளம் பங்கேற்று அசத்தியது.
அதே எதிர்பார்ப்புடன் டெல்லியிலும் பெரியார் விழாவுக்கு அதே தி.க. தலைவர் வீரமணி ஏற்பாடு செய்தார். சென்னையில்ஜெயலலிதா தலைமையில் விழா நடத்திய அவர், டெல்லி விழாவுக்கு மூப்பனாரை தலைமை தாங்கச் செய்தார்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவினர் யாரும் டெல்லி பெரியார் விழாவில் கலந்து கொள்ளவில்லை. மற்ற தோழமைக்கட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்றபோதிலும் அதிமுக மட்டும் அடியோடு புறக்கணித்ததால் மூப்பனார்கோபமடைந்துள்ளார்.
அந்த கோபத்தை தான் இரண்டு நாட்களுக்கு முன்பு மூப்பனார் செயலில் காட்டியுள்ளார். தீரர் சத்தியமூர்த்தி சிலை அமைப்புதொடர்பாக அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி கூட்டிய கூட்டத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியைசந்தித்துப் பேசினார் மூப்பனார்.
அதற்கு அடுத்த நாள் "அதிமுகவுடன் கூட்டணி இன்னும் டிவாகவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதெல்லாம்ஜெயலலிதாவுக்கு சேர வேண்டிய விஷயங்கள் என்று தமாகா வட்டாரம் திட்டவட்டமாக கருதுகிறது.
இவற்றிற்கு ஜெயலலிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? என்பது தான் தமாகாவின் இப்போதைய எதிர்பார்ப்பு.
இதற்கிடையில் திராவிடர் கழக வட்டாரம் லேசாக அதிர்ந்து போய் உள்ளது. திமுக தலைமை மீதுள்ள தீராத கோபத்தின்காரணமாக ஜெயலலிதாவுக்கு வலிய வலிய வந்து உதவி செய்யும் இக்கட்சி சென்னையில் நடத்திய பெரியார் விழாவுக்கும்மூப்பனாரை தான் தலைமை வகிக்கச் செய்ய நினைத்தது.
ஆனால், அந்த விழாவில் தாம் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எனது தலைமையில் தான் விழா நடைபெற வேண்டும் என்றுஜெயலலிதா கண்டிஷன் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு பணிந்து ஜெயலலிதா தலைமையில் பெரியார் விழா நடத்தியதால் தான் கருணாநிதியின் கடும் விமர்சனத்திற்கும், அதன்காரணமாக பழைய குப்பைகளை கிளற வேண்டிய அளவுக்கு பதிலுக்கு பதில் என்று விமர்சனம் செய்ய வேண்டிய நிலைஏற்பட்டது என்றும் தி.க. நினைக்கிறது.
அதை சரிக்கட்டுவதற்கு தான் டெல்லி பெரியார் விழாவுக்கு மூப்பனாரை தலைமை ஏற்க அழைத்தது. இதைப் புரிந்துகொள்ளாமல் ஜெயலலிதா, இப்படி நடந்து கொள்கிறாரே என்ற வருத்தம் இக்கட்சிக்கும் இருக்கிறது என்கிறது தமாகா.
எது எப்படியோ? ஜெயலலிதாவை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அவரோடு தோழமையை தொடர முடியும் என்பது கடந்தகால வரலாறு. அந்த வரலாற்றை புரிந்து கொண்டவராக மூப்பனார் நடந்து கொள்வாரா அல்லது தன்மானம் கருதி தடம்மாறுவாரா என்பது போகப் போகத் தெரியும்.












Click it and Unblock the Notifications