சசிகலாவுக்கு அதிமுகவில் பதவி தந்தார் ஜெயலலிதா
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவை அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா. இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
அதிமுக கட்சியின் சட்டப்படி பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரைத்தான் கட்சியின் நிர்வாக பொறுப்புக்களில் நியமிக்க முடியும். இதற்கிடையே,திங்கள்கிழமை சசிகலா அதிமுக பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் திருமதி என்.சசிகலா இன்று முதல் நியமிக்கப்பட்டிருக்கிறார். கழக உடன்பிறப்புக்கள் அவருக்கு முழு ஒத்துழைப்புநல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள பல ஊழல் வழக்குகளில் சசிகலாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டான்சி நிலப் பேர ஊழல்வழக்கில் சசிகலாவுக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு உறுப்பினராக சசிகலாநியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications