கோவையில் அமையுமா உயர்நீதிமன்றக் கிளை?
கோவை:
கோயம்பத்தூரில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சர்க்யூட் கிளை அமைக்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று மத்திய சட்டம் மற்றும் கம்பெனி விவகாரத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கோவை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசியதாவது:
உயர்நீதிமன்றங்களில் 34 லட்ச வழக்குகளும், கிளை நீதிமன்றங்களில் இரண்டரை கோடி வழக்குகளும் தேங்கியுள்ளன. உயர்நீதிமன்றங்களில் காலியாகஉள்ள இடங்களுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல.
உயர்நீதிமன்றங்களில் 160 காலி இடங்கள் உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்பாமல் விடப்பட்டிருப்பதற்கு மத்திய அரசு எந்த வகையிலும்பொறுப்பேற்காது. ஆனால், இந்த பணியிடங்களை நிரப்புவதில் எவ்வித யோசனையும் இல்லை. இவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியபொறுப்பு அந்தந்த மாநில அரசுகளுக்கு உண்டு.
வழக்கமாக ஒரு நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன் அந்த பணியிடத்தை நிரப்ப 6 மாதங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கானநடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
அகில இந்திய அளவில் நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின்எண்ணிக்கை 34 லட்சம். இதற்கு கீழ் உள்ள கிளை நீதிமன்றங்களில் இரண்டு கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. சிவில் வழக்குகள் எண்ணிக்கையில்அடங்காதவை.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்களுக்குத் துணையாக 5 கூடுதல் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்துவருகிறது. எனவே, இந்த நீதிமன்றங்களை அமைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
வழக்கறிஞர்களுக்கான சட்ட ஒழுங்கு முறை விதிகள் அரசால் உருவாக்கப்பட்டது. இந்த விதிமுறைகளுக்கு வழக்கறிஞர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளதை அடுத்து இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களுடன் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையின்போது இதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைஅக்டோபர் 21ம் தேதி நடக்கவுள்ளது.
கோவையில் சர்க்யூட் பெஞ்ச் அமைப்பது குறித்து மாநில அரசும் உயர்நீதிமன்றமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.