டிஸ்மிஸ் ஆனதால் வெறுப்பு: முன்னாள் ராணுவ வீரர் சுட்டு 5 பேர் பலி
குவஹாத்தி:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராணுவ வீரர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் இறந்தனர். 5பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.
அந்த ராணுவ வீரரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தநபர் மீது நிறைய புகார்கள் வந்தன.
இதையடுத்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு ராணுவத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட அந் நபர்ஹோவ்லி என்ற இடத்திலிருந்து கீழ் அஸ்ஸாம் பகுதியில் உள்ள டின்சுகியா என்ற இடத்துக்கு ரயிலில் அழைத்து வரப்பட்டார்.பாதுகாப்பு சில ராணுவ வீரர்கள் உடன் வந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை குவஹாத்தி ரயில் நிலையத்தை அந்த ரயில் அடைந்தது. அப்போது திடீரென்று எழுந்த அந்த நபர்,பாதுகாப்புக்கு வந்த போலீஸாரிடமிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கி எடுத்து பிளாட்பாரத்தில் நின்றிந்தவர்களைப் பார்த்து சுட்டார்.
உடனே, தப்பியோடும்படி மக்களைப் பார்த்து ராணுவத்தினர் கூச்சலிட்டனர். இதற்கிடையே, ரயில் பெட்டியில் தன்னை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அந் நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார்.
அவரை நோக்கி மற்ற ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டனர். இச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர்பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
சண்டையின் முடிவில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த ராணுவ வீரரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 20 நிமிடத்தில்சினிமாவில் நடப்பது போன்று நடந்து முடிந்த இச் சம்பவத்தை அடுத்து குவஹாத்தி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.