மினி கிரிக்கெட் உலக கோப்பை .. கென்யாவை வென்றது இந்தியா
நைரோபி:
ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவைத் தோற்கடித்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 2-வது நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவும் கென்யாவும் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த கென்யா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டவேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சிறப்பாகப் பந்து வீசினார்.
கென்யா அணியில் ஆர். ஷாவும், மெளரீஸ் ஒடும்பேயும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். ஷா 60 ரன்களும் ஒடும்பே 51 ரன்களும் எடுத்தனர்.அவர்களுக்கு அடுத்து ஒடோயோ 35 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் ஜாகீர் கான் சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், அகார்கர், பிரசாத், கும்ளே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.கும்ளே 10 ஓவரில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
50 ஓவரில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் டெண்டுல்கரும், கேப்டன் கங்குலியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்கள் எடுத்தனர்.
ஆனால், அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது டெண்டுல்கர் அவுட்டானார். அவர் 25 ரன்களே எடுத்தார். அவரை அடுத்து திராவிட் ஆட வந்தார்.
அவர் வழக்கம்போல் தனது நிதானமான ஆட்டத்தைக் கையாண்டார். மறுமுனையில் கங்குலி ஒருசில அதிரடி ஷாட்டுகளை அடித்து ரன்கள் எடுத்தார்.இருப்பினும் அவரும் நிதானமாகவே ஆடினார்.
தேவைப்பட்ட ரன்விகிதத்தில் ரன்கள் வந்தபடி இருந்ததால் ரன்கள் குவிக்க இந்திய வீரர்கள் அதிகம் சிரமப்படவில்லை. ஆனால், அணியின் ஸ்கோர் 133ஆக இருந்தபோது கங்குலி அவுட்டானார். அவர் 101 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இதில் இரு சிக்சர்களும் அடங்கும்.
அவருக்குப் பதிலாக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட காம்ப்ளி களமிறங்கினார். மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்அவர் சிறப்பாக ஆடினார்.
அவரும் திராவிடும் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தனர். இறுதியில் 42.3 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 8விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
திராவிட் அவுட்டாகாமல் 87 பந்துகளில் 68 ரன்களும், காம்ப்ளி 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் அனில் கும்ளே சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா அடுத்து உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. 7-ம் தேதி இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
ஸ்கோர் விவரம்:
கென்யா - 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள்.
இந்தியா - 42.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள்.












Click it and Unblock the Notifications