நரசிம்மராவுக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்பூட்டா சிங் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராவும், பூட்டாசிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இருவரும் தலா ரூ 10,000 ஜாமீன் தொகையும், காப்புத் தொகையாக ரூ 10, 000 மும் கட்டஉத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகையில், ராவுக்கும், பூட்டாசிங்குக்கும் இவ்வழக்கில் தொடர்பில்லாமல் இருப்பதற்கானசாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அதனால் அவர்களது தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, 1993 ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக நரசிம்மராவ் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அஜித் பாரிஹோக், வழக்கில் தொடர்புடைய, நரசிம்மராவுக்கும், பூட்டாசிங்குக்கும் மூன்று வருட தண்டனையும், ரூ 2லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.