டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி டாக்கா சென்றது
கல்கத்தா:
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி டாக்கா புறப்பட்டுச்சென்றது.
வரும் 10ம் தேதி இந்தப் போட்டிகள் டாக்காவில் தொடங்குகின்றன.
சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி செவ்வாய்க்கிழமை டாக்கா புறப்பட்டுச் சென்றது.
யுவராஜ் சிங்கின் பாஸ்போர்ட்டில் சில பிரச்சனைகள் இருந்ததால், அவர் மட்டும் அணியினருடன் செல்லவில்லை.பாஸ்போர்ட் பிரச்சனை தீர்ந்தவுடன், யுவராஜ் சிங் டாக்கா சென்று இந்திய அணியில் கலந்து கொள்வார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா செல்லுமுன் கல்கத்தாவில் கேப்டன் சவுரவ் கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான சிபிஐ அறிக்கை, இந்திய கிரிக்கெட் அணியை எந்த விதத்திலும் பாதிக்காது.ஏனெனில் தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் சிபிஐ அறிக்கையில் இல்லை. கிரிக்கெட்வீரர்கள், சூதாட்ட பிரச்சனையை விட்டுவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் மோதின. இதில்இந்தியா தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இதை கெட்ட கனவாக நினைத்து மறந்து விட வேண்டும். இளம்வீரர்களைக் கொண்ட இந்திய அணி உலகிலேயே சிறந்த அணியாக வளர்ந்து வருகிறது.
டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வெற்றி பெரும் என நம்பலாம்.சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அணியில் இல்லை என்றாலும் சுனில் ஜோஷி, முரளி கார்த்திக் ஆகியோர்உள்ளனர் என்றார் கங்குலி.