நேருவை நினைவு கூர்ந்த சென்னை
சென்னை:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 112 வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு தமிழக கவர்னர் பாத்திமா பீவி,அமைச்சர்கள், தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினமாகவும் இது கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் திருவுருவச் சிலைக்கு கவர்னர் பாத்திமா பீவி, அமைச்சர்கள் அன்பழகன்,முல்லைவேந்தன், சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமாகா தலைவர் மூப்பனார் காலை 10 மணி அளவில் நேரு சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்திற்குமலரஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்திற்கு மாநிலத் தலைவர் இளங்கோவன் மாலை அணிவித்தார்.
பின்னர் இளங்கோவன் வெளியிட்ட செய்தியில், நேருவின் தியாகத் திரு குடும்பத்தின் வாரிசாக இன்று பெருமை பெற்றிருக்கும் சோனியா அகில இந்திய காங்கிரஸ்தலைவியாக வெற்றி பெறப் போகும் இனிய நன்னாளில் நேருவின் கொள்கைகளை நினைவில் கொள்வோம் என்று கூறியுள்ளார்.