தேர்தல் கூட்டணி குறித்து சோனியாவுடன், ஜெ.பேச்சு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாள் ஜெயலலிதா, தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தங்கள் கட்சியினரை தயார்படுத்தி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன், அதிமுக கூட்டணி சேரலாம் என்று தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல்கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடன் புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் தமிழககாங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் 70 க்கும் மேற்பட்ட காங்கிரசார் டெல்லி சென்றுள்ளனர்.
இவர்கள் சோனியாவை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை நீக்கி விட்டு வேறு புதிய தலைவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு புதிதாக 71 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன. மாவட்டத்தலைவர்கள் பெயரும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.