மேற்கு வங்காளத்தில் குடும்ப ஜெயில்
கல்கத்தா:
மேற்கு வங்க அரசு, 2001 ம் வருடம் ஜனவரி முதல் குடும்ப ஜெயில் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
லகோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடும்ப ஜெயிலில் 10 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வாழலாம்.
மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்கி அதனைச் செயல்படுத்தும் முறைகளில் இயங்கி வருகிறது. இதற்கானஉத்தரவை முர்ஷிதாபாத்திலுள்ள லகோலா ஜெயிலுக்கு ஏற்கனவே மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொடூரமான மற்றும் மன்னிக்கமுடியாத குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் குறைந்தது 7 அல்லது 7க்கும் மேற்பட்ட வருடங்கள் சிறை தண்டனைபெற்றிருப்பார்கள். அவர்களுக்கு மட்டுமே இந்த குடும்ப ஜெயில் வசதி செய்து கொடுக்கப்படும்.
மேலும், கற்பழிப்பு மற்றும் ரெளடித்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட மாட்டாது.
லகோலா ஜெயிலில் இந்தக் குடும்ப ஜெயில் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கைதிகள் ஆயுள்தண்டனைக் கைதிகளாவர்.
அமைச்சர் கருத்து:
இதுகுறித்து, மாநில சிறைத்துறை அமைச்சர் பிஸ்வநாத் சவுத்ரி கூறுகையில், கைதிகளுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் இந்த திட்டம்அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் தாங்கள் தவறு செய்து விட்டுத் தண்டனை அனுபவிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் மன நெருக்கடிக்கு ஆளாகாதவகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தற்போது 10 குடும்பங்கள் தங்கும் வகையில் பல அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே ஜெயிலில் 100 அறைகள் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடவசதியும் உள்ளது.
கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். வரலாம். அவர்களது குழந்தைகள்பள்ளிகளுக்குச் சென்று வரலாம். அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடோ, கெடுபிடியோ கிடையாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.